மேக்-கப் போட்டாலும், எண்ணெய் பசை அதிகமா இருக்கா?

மேக்-கப் போட்டாலும், எண்ணெய் பசை அதிகமா இருக்கா?

நிறைய பேர் முகத்தில் எண்ணெய் பசை தெரியக்கூடாது என்று தான் மேக்-கப் அதிகம் போடுவார்கள். ஆனால் சிலருக்கு மேக்-கப் போட்ட பின்னரும், முகத்தில் அதிகப்படியான எண்ணெய் இருப்பது போல் இருக்கும். வேண்டுமெனில் நடிகைகள் பலரை பல விழாக்களின் போது பார்த்திருப்பீர்கள். அவர்கள் ஆயில் மேக்-கப் தான் அதிகம் போடுவார்கள். ஆம், மேக்-கப்பில் ஆயில் மேக்-கப் என்று ஒன்று உள்ளது. அதிலும் நயன்தாரா, பிரியாமணி போன்ற நடிகைகள், இத்தகைய மேக்-கப்பை அதிகம் போடுவார்கள். ஆனால் சிலருக்கு ஆயில் மேக்-கப் போடாமல், சாதாரண மேக்-கப் போட்டாலே எண்ணெய் வழியும். இவ்வாறு அதிக எண்ணெய் பசையுடன் தெரிவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதில் மேக்-கப் போடும் முன் செய்ய வேண்டிய அடிப்படை செயல்களை செய்யாமல் போடுவது மற்றும் அதிக எண்ணெய் பசை சருமம் இருப்பதும் சில காரணங்கள். மேலும் இவ்வாறு மேக்-கப்பிற்கு பின் முகத்தில் எண்ணெய் அதிகம் வழிவது போன்ற தெரிந்தால், அது முதுமைத் தோற்றத்தை தரும். எனவே இத்தகைய தோற்றத்தை தவிர்க்க, என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று ஒருசிலவற்றை பட்டியலிட்டுள்ளோம்.

முகத்தை கழுவுவது 
மேக்-கப் போடும் முன் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு கழுவினால், முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெயானது நீங்கிவிடும். பின் மேக்-கப் போட்டால், எண்ணெய் வழியாமல் இருக்கும்.

ஸ்கரப் 
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், மேக்-கப் போடும் முன், முகத்திற்கு உப்பு அல்லது சர்க்கரையை வைத்து ஒரு சிறு ஸ்கரப் செய்து, பின் மேக்-கப் போட்டால், சருமத் துளைகளில் உள்ள எண்ணெயானது வெளியேறிவிடும்.

ஐஸ் கட்டி 
மேக்-கப் செய்த பின் எண்ணெய் வழியாமல் இருப்பதற்கு, ஐஸ் கட்டிகளை வைத்து சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் மேக்-கப் போட்டால், முகம் நன்கு பிரகாசமாக இருக்கும்.

நீர்ம ஃபௌண்டேஷன் 
மேக்-கப்பிற்கு பின் முகத்தில் எண்ணெய் வழிவது போல் இருந்தால், மேக்-கப்பின் போது நீர்ம ஃபௌண்டேஷன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் அதற்கு பதிலாக ஃபௌண்டேஷன் பவுடரைப் பயன்படுத்தலாம்.

கன்சீலர் 
ஒருவேளை ஃபௌண்டேஷன் பவுடராக இருந்தால், கன்சீலரை குறைவாக பயன்படுத்த வேண்டும். ஏனெனில் பொதுவாக கன்சீலர்கள் ஆயில் மாதிரி இருக்கும். எனவே அளவாக பயன்படுத்தினால், முகம் நன்கு பிரகாசமாக இருக்கும்.

பவுடர் 
மேக்-கப் முடியும் போது, ஃபௌண்டேஷன் பவுடரையோ அல்லது கோல்டன் டஸ்ட்டையோ பயன்படுத்தினால், அந்த பவுடரானது முகத்தில் இருக்கும் எண்ணெயை உறிஞ்சிவிடும்.

டிஸ்யூ பேப்பர் 
எப்போதும் டிஸ்யூ பேப்பரை கையில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் அதனை வைத்து அவ்வப்போது முகத்தை துடைத்தால், முகத்திலிருந்து வெளிவரும் எண்ணெய் மேக்-கப்பை கலைக்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காய்.....

                           ஆஸ்துமா, நீரிழிவு, மலச்சிக்கலை குணப்படுத்தும் நெல்லிக்காய்

நமக்கு எளிதாக கிடைக்கும் விலை மலிவான நெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கதிகமாக நிறைந்துள்ளது.


நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்றும் உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது. நெல்லிக்காயால் செய்யப்படும் சாறானாது சற்று துவர்ப்புடன் இருக்கும். துவர்ப்புடன் உள்ளது என்பதற்காக அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம்.

ஏனெனில் அதனை தினமும் உடலில் சேர்த்து வந்தால், அந்த நெல்லிக்காயின் உண்மையான பலனை நிச்சயம் உணர முடியும்.

* நீரிழிவு நோயாளிகள், நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து தினமும் குடித்து வந்தால் மிகவும் நல்லது.

* நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையானது படிப்படியாக குறையும்.

* நெல்லிக்காய் சாறில் சிறிது தேன் கலந்து தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் ஆஸ்துமா குணமாகிவிடும்.

* நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே இதனை தினமும் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்துவிடலாம்.

* நல்ல புதிய நெல்லிக்காய் சாற்றில் தேன் சேர்த்து குடிக்கும் போது, இரத்தமானது சுத்தமாகும். இதனால் நன்கு சுறுசுறுப்போடு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

* சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். அத்தகைய எரிச்சலைப் போக்குவதற்கு தினமும் இரண்டு முறை நெல்லிக்காய் சாறு குடிக்க வேண்டும்.

* கோடை காலத்தில் உடலானது அதிக வெப்பமாக இருக்கும். எனவே அத்தகைய உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நெல்லிக்காய் சாறு மிகவும் சிறந்ததாக இருக்கும்.

* முகம் நன்கு அழகாக பொலிவோடு இருப்பதற்கு தினமும் காலையில் நெல்லிக்காய் சாற்றுடன் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.

முதுமையிலும் இளமையா தெரியணுமா...

முதுமையிலும் இளமையா தெரியணுமா...

முதுமையிலும் இளமையா தெரியணுமா? அப்ப இத படிங்க:-

                              அனைவருக்குமே நன்கு அழகாகவும், இளமையுடனும் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். இளமை என்ற ஒன்று இருந்தால், நிச்சயம் முதுமையும் வரும். ஆனால் அத்தகைய முதுமை, இளமை காலத்திலேயே வந்தால் தான் மிகவும் கஷ்டம். நிறைய பேர் இத்தகைய பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக நிறைய ஆன்டி-ஏஜிங் க்ரீம்களை பயன்படுத்துகின்றனர். இருப்பினும் அதற்கான பலன் சிறிது நாட்கள் மட்டும் தானே தவிர, முதுமை வயது எட்டும் வரை நீடிப்பதில்லை. ஆனால் இந்த பிரச்சனைக்கு உணவுகளால் தீர்வு காண முடியும். சாதாரணமாகவே உண்ணும் உணவைப் பொறுத்து தான் உடல் நிலை இருக்கும் என்று சொல்வார்கள். எனவே நல்ல ஆரோக்கியமான, இளமைத் தோற்றத்தை நீட்டிக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைய உணவுகளை சேர்த்து வந்தால், உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேறி, உடலே நன்கு பொலிவோடு அழகாக மின்னும். அதிலும் குறிப்பாக ஆன்டி-ஆக்ஸிடன்ட்களில் வைட்டமின் சி, ஏ, ஈ, லைகோபைன் மற்றும் லூடின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், முதுமை வயதிலும், சற்று இளமையுடனேயே இருக்கலாம். அந்த உணவுகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மாம்பழம் 
கோடைகாலத்தில் மாம்பழம் மிகவும் விலைமலிவாக கிடைக்கும். இந்த பழத்தில் கரோட்டினாய்டு பீட்டா-கரோட்டீன் என்னும் ஆன்டி.ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. இவை சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவும். எனவே முடிந்த அளவில் இதனை வாங்கி சாப்பிடுவது, இளமை தோற்றத்தை அதிகரிக்கும்.

கேல் 
கேல் (Kale) கீரையில் லூடின் மற்றும் ஸீக்ஸாக்தைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. எனவே இந்த கீரையை அதிகம் சாப்பிட்டால், இளமையுடன் காணப்படலாம்.

பசலைக் கீரை 
ஒரு கப் பசலைக் கீரையில், சருமத்திற்கும், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களான 20, 350 mcg லைகோபைன் மற்றும் இதர வைட்டமின்களும் நிறைந்துள்ளன.

ப்ராக்கோலி 
பச்சை இலைக் காய்கறிகளில் ப்ராக்கோலியில் அதிக அளவில் லைகோபைன் உள்ளது. எனவே சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்கி, நன்கு இளமையாகக் காணப்பட, இந்த காய்கறியை உணவில் சேர்ப்பது நல்லது.

முட்டை 
முட்டையிலும், லூடின் மற்றும் ஸீக்ஸாக்தைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்திற்கு மட்டுமின்றி, கண்களுக்கும் சிறந்தது.

குடைமிளகாய் 
குடைமிளகாயில் சருமத்தையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும், வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. அதிலும் இந்த காய்கறியில் நிறைய வண்ணங்கள் உள்ளன. இவை அனைத்திலுமே கரோட்டினாய்டுகள் மற்றும் பீட்டா-கரோட்டீன் அதிகம் உள்ளன.

பால் 
பாலில் கால்சியம், புரோட்டீன் மட்டுமின்றி, வைட்டமின் ஏ மற்றும் கரோட்டீனாய்டுகள் அதிகம் நிறைந்துள்ளது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த பாலை, அதிகம் குடித்தால், நிச்சயம் உடல் ஆரோக்கியத்துடன், இளமையோடும் இருக்கும்.

தக்காளி 
தக்காளியில் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும முதுமைக் கோடுகள் போன்றவற்றை தடுக்கும் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக இருக்கிறது. எனவே இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது சருமத்திற்கும் மாஸ்க் போன்றும் பயன்படுத்தலாம்.

சிட்ரஸ் பழங்கள் 
சிட்ரஸ் பழங்களில் ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்திருப்பது தெரியும். ஆகவே இவற்றை சாப்பிட்டால், இதில் உள்ள வைட்டமின் சி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தை புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

தர்பூசணி 
நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள இந்த பழத்தில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டும் அதிகம் உள்ளது. எனவே இவற்றை அதிகம் சாப்பிட, வெயிலினால் பாதிப்படைந்த சரும செல்கள் அனைத்தும் குளிர்ச்சியடைந்து, சருமம் அழகாக காணப்படும்.