கால்சியம் இருக்கும் உணவுகள் - High Calcium Foods

கால்சியம் அதிகம் இருக்கும் 19 உணவுகள்

உடலுக்கு வேண்டிய சத்துக்களில் கால்சியம் மிகவும் இன்றியமையாதது. கால்சியம் சத்து உடலில் குறைவாக இருந்தால், எலும்புகள் ஆரோக்கியமின்றி இருப்பதோடு, இரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்சனைகள் ஏற்படும். தற்போது நிறைய மக்கள் மூட்டு வலியால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். இவற்றிற்கு காரணம் உடலில் கால்சியம் சத்தானது மிகவும் குறைவாக இருப்பதால் தான். மேலும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சரியாக உட்கொள்ளததும் ஒரு வகையில் காரணம். அதுமட்டுமின்றி கால்சியம் உள்ள உணவுகளை மட்டும் சாப்பிட்டால், அனைத்தும் சரியாகிவிடாது. ஏனெனில் கால்சியம் உள்ள உணவுகளை சாப்பிட்டால், கால்சியத்தை உடலில் உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி சத்தும் மிகவும் அவசியமாகிறது. எனவே கால்சியத்துடன், வைட்டமின் டி உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். பொதுவாக கால்சியம் குறைபாடானது ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படும். ஏனெனில் மாதம் மாதம் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதால், அதிலேயே பெரும்பாலான கால்சியம் உடலில் இருந்து வெளியேறிவிடும். மேலும் பிரசவத்தின் போதும் நிறைய் கால்சியமானது போய்விடும். எனவே ஆண்களை விட பெண்கள் கால்சியம் உணவுகளை சாப்பிடுவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இப்போது எந்த உணவுகளிலெல்லாம் கால்சியம் சத்து அதிகம் உள்ளது என்பதைப் பார்ப்போமா!!!

பால் 
பாலில் கால்சியம் அதிகம் நிறைந்திருப்பது அனைவருக்குமே தெரியும். அதிலும் பெண்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் புரோட்டீன் பொடியை சேர்த்து குடித்தால், ஒரு நாளுக்கு தேவையான கால்சியம் சத்தை பெறலாம்.

தயிர் 
பால் பிடிக்காதவர்கள், தயிரை சாப்பிடலாம். தயிரிலும் பாலில் உள்ள கால்சியத்தின் அளவு உள்ளது.



மத்தி மீன் 
மீன்களில் மத்தி மீன் மிகவும் பிரபலமானது, அத்தகைய மீனில் 33 சதவீதம் கால்சியம் சத்தை தருகிறது. எனவே இதனை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால், நல்லது.

சீஸ் 
பால் பொருட்களில் ஒன்றான சீஸ் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் சீஸிலும் கால்சியம் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது.


உலர் அத்திப்பழம் 
அத்திப்பத்தில் இரண்டு வகையான முக்கியமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் பெண்களுக்கு தேவையான முக்கியமான சத்துக்கள் உள்ளது. அது கால்சியம் மற்றும் இரும்புச்சத்து. எனவே இதனை தினமும் 2-3 துண்டுகள் சாப்பிட்டு வருவது நல்லது.


பச்சை இலைக்காய்கறிகள் 
பால் பொருட்களைத் தவிர, கால்சியம் சத்தானது பச்சை இலைக் காய்கறிகளில் நிறைந்துள்ளது. அதிலும் பசலைக் கீரை, ப்ராக்கோலி போன்றவற்றை அளவுக்கு அதிமான அளவில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.


கடல் சிப்பி 
பொதுவாக அனைத்து கடல் உணவுகளிலும் கால்சியம் ஆக்சலேட் என்னும் பொருள் உள்ளது. ஆனால் இதனை ஆண்கள் அதிக அளவில் சாப்பிட்டால், அவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் வந்துவிடும். பெண்கள் இதை சாப்பிட்டால், அதிகப்படியான கால்சியத்தை பெறலாம்.


பாதாம் 
பாதாமில் வைட்டமின் ஈ சத்து மட்டுமின்றி, 70-80 சதவீத கால்சியம் நிறைந்துள்ளது. எனவே தினமும் ஒரு கையளவு பாதாமை சாப்பிட்டு, உடலில் கால்சியத்தை அதிகரியுங்கள்.

இறால் 
இறாலில் கால்சியம் அதிகம் உள்ளது. ஆனால் அதை அளவுக்கு அதிகமாக வேக வைத்தால், அதில் உள்ள கால்சியம் போய்விடும். எனவே தீயை குறைவில் வைத்து, அளவுக்கு அதிகமாக வேக வைத்துவிடாமல் சாப்பிட வேண்டும்.


எள் 
பொதுவாக எள்ளை அதிகமாக சாப்பிட மாட்டோம். ஆனால் ஒரு டீஸ்பூன் எள்ளில், ஒரு டம்ளர் பாலில் இருக்கும் கால்சியம் சத்தானது நிறைந்துள்ளது.


பிரேசில் நட்ஸ் 
6 பிரேசில் நட்ஸில் 45 மில்லி கிராம் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இந்த நட்ஸிலும் அதிகமான புரோட்டீன் உள்ளது.


உலர்த்திய மூலிகைகள் 
நிறைய உலர்த்திய மூலிகைகளிலும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளன. எப்படியிருப்பினும் இத்தகைய மூலிகைகளை அப்படியே சாப்பிட முடியாது. ஆனால் அவற்றை சூப், குழம்பு போன்றவற்றில் தினமும் சிறிது சேர்த்து சாப்பிட்டால் நல்லது.


டோஃபு 
டோஃபு என்பது சோயா பாலினால் உருவான ஒரு வகையாக சீஸ். பொதுவாக சோயா பாலிலும் கால்சியம் அதிகம் இருக்கும். எனவே இந்த டோஃபுவிலும் நிச்சயம் கால்சியம் அதிகம் இருக்கும்.


ஆரஞ்சு 
சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மட்டுமின்றி, கால்சியம் சத்தும் அடங்கியுள்ளது.



சாலமன் 
சாலமன் மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதோடு, இந்த மீன் கடல் நீரில் உள்ள கனிமச்சத்துக்களை உறிஞ்சிக் கொள்வதால், இதனை முள்ளோடு சாப்பிட வேண்டும். இதில் கால்சியம் குறைவாக இருப்பினும், உடலுக்கு வேண்டிய மற்ற அனைத்து சத்துக்களையும் பெறலாம்.


சோயா பால் 
சோயா பாலில் சாதாண பாலை விட அதிக அளவில் கால்சியம் இல்லாவிட்டாலும், ஒரு அவுண்ஸ் பாலில் 300 மில்லி கிராம் கால்சியம் சத்தை பெறலாம்.

ஓட்ஸ் 
ஓட்ஸை அதிகம் சாப்பிடுவதால், இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. அதேசமயம் இதில் சில கால்சியம் சத்தும் உள்ளடங்கியுள்ளது. எனவே பெண்களுக்கு, இது ஒரு சிறந்த காலை உணவாக இருக்கும்.


அறுகீரை (Arugula) 
இது ஒருவகையான கீரை வகைகளுள் ஒன்று. இதனை பொதுவாக சாலட்டில் தான் பயன்படுத்துவார்கள். இந்த கீரையில் கால்சியம் அதிகம் நிறைந்துள்ளதால்,. இதனை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.


வெள்ளை காராமணி 
பொதுவாக பீன்ஸில் கால்சியம் அதிகம் இருக்கும் என்று கேள்விபட்டிருக்கமாட்டோம். ஆனால் இதிலும் ஓரளவு கால்சியம் நிறைந்துள்ளது. அதிலும் 1/2 கப் வெள்ளைக் காராமணியில் 100 மில்லி கிராம் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.

உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் - Secret weight loss foods



உடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள்


தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு பலர் கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் டயட் என்று சில சமயங்களில் சாப்பிடாமல் இருப்பார்கள். இப்படியெல்லாம் நடந்தால், எந்த ஒரு பலனும் கிடைக்காது. எனவே எப்போதும் மிகவும் ஸ்மார்ட்டாக செயல்பட வேண்டும்.

ஆம், எப்போதும் கடுமையான உடற்பயிற்சி மற்றும் டயட்டை மேற்கொண்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்களானது கிடைக்காமல், உடல் மிகவும் சோர்வடைவிடும். இதனால் உடல் எடை குறைகிறதோ இல்லையோ, பல உடல்நலப் பிரச்சனைகளை நிச்சயம் சந்திக்க நேரிடும். எனவே அளவான உடற்பயிற்சியுடன், ஆரோக்கியமாக சாப்பிட்டால், உடல் எடையை நிச்சயம் குறைக்கலாம். அதிலும் இதுவரை எத்தனையோ உடல் எடையை குறைக்கும் உணவுப் பொருட்களைப் பார்த்திருப்போம்.

ஆனால், இப்போது பார்க்கப்போவது பலரும் நினைத்துப் பார்க்காத உடல் எடையைக் குறைக்கும் சில உணவுப் பொருட்களைத் தான். இத்தகைய உணவுப் பொருட்களை சாப்பிடுவதோடு, அத்துடன் தினமும் சரியான அளவில் உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் உடல் எடையைக் குறைப்பதற்கு உணவுகள் மட்டும் உதவாது. ஆகவே உடற்பயிற்சியையும் பின்பற்றுங்கள். சரி, அந்த உணவுப் பொருட்கள் என்னவென்று தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தால், கீழே படித்துப் பாருங்கள்...


1 காளான் 
உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் உணவுப் பொருட்களில் ஒன்று காளான். இந்த காளானை உணவில் அதிகம் சேர்ந்து வந்தால், இதில் உள்ள குறைவான கலோரி மற்றும் கொழுப்புக்களால், உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும்.



2 முட்டையின் வெள்ளைக்கரு 
முட்டையின் வெள்ளைக்கருவில் கார்போஹைட்ரேட் குறைவாகவும், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றம் இதர ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே தினமும் உடற்பயிற்சி செய்து முடித்தப் பின்னர், முட்டையின் வெள்ளைக்கருவை சாப்பிட்டால், உடலின் சக்தி அதிகரிப்பதோடு, நீண்ட நேரம் பசிக்காமலும் தடுத்து, உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவும்.



3 ஆப்பிள் 
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரை பார்க்க வேண்டிய அவசியமே இருக்காது. அதே ஆப்பிளை தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடையையும் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அது உடலில் தங்கும் தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து, உடல் பருமன் அதிகரிப்பதை தடுக்கும்.



4 பாகற்காய் 
பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமின்றி, உடல் பருமனால் அவஸ்தைப்படுவோருக்கும் மிகவும் நல்லது. எப்படியெனில், பாகற்காயை சாப்பிட்டால், அதில் உள்ள சத்துக்களானது, உடலில் தங்கும் தேவையற்ற கொழுப்புக்கள் தங்குவதை கரைப்பதோடு, கலோரிகளையும் எரித்துவிடும்.



5 காலிஃப்ளவர் 
உடல் எடையை குறைக்கப் பயன்படும் உணவுகளில் காலிஃப்ளவரும் ஒன்று. அதிலும் அந்த காலிஃப்ளவரை வேக வைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. ஏனெனில் அதில் குறைவான கலோரியும், அதிகமான வைட்டமின்களும் நிறைந்துள்ளன. மேலும் இதனை சாப்பிட்டால், அடிக்கடி பசி ஏற்படாமலும் இருக்கும்.



6 பட்டை 
பட்டையை உணவில் சேர்த்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுடன் இருப்பதோடு, உடல் எடையை குறைக்கவும் உதவும். எனவே இநத் மசாலாப் பொருளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், நல்ல பலன் கிடைக்கும்.



7 மிளகாய் 
அனைவருக்குமே காரம் என்றால் மிகவும் பிடிக்கும். கார உணவுகள் கூட ஒரு வகையில் உடல் எடையைக் குறைக்க உதவியாக இருக்கும். அதிலும் குறிப்பாக சிவப்பு மிளகாயை உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டால், அந்த மிளகாயில் உள்ள பொருளானது, உடலில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைத்து, டாக்ஸின்களை வெளியேற்றி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.



8 முள்ளங்கி 
முள்ளங்கியை வேக வைத்து சாப்பிட்டால், அதிலுள்ள நார்ச்சத்துக்களானது அப்படியே கிடைத்து, உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களானது கரைக்கப்படுவதோடு, நீண்ட நேரம் பசியெடுக்காமலும் இருக்கும்.



9 டார்க் சாக்லெட் 
அனைவரும் சாக்லெட்டில் கலோரிகள் அதிகம் உள்ளது என்று சாப்பிடுவதில்லை. ஆனால் உண்மையில் டார்க் சாக்லெட்டை அளவாக சாப்பிட்டால், உடல் எடை குறைவதோடு, இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.



10. பச்சை பயறு 
அனைத்து சமையலறைகளிலும் கிடைக்கக்கூடிய ஒரு வைட்டமின் நிறைந்த உணவுப் பொருள் தான் பச்சை பயறு. உடல் எடையை குறைக்க நினைப்போர், உடற்பயிற்சியை மேற்கொள்வதோடு, பச்சை பயறு அதிகம் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும். மேலும் இது செரிமானத்திற்கும் மிகவும் நல்லது.

சிக்ஸ் பேக் வைக்க உதவும் உடற்பயிற்சிகள் - best exercises to get six pack abs

இன்றைய காலகட்டத்தில், அழகான பெண்களை கவருவதற்கு சிக்ஸ் பேக்கை விட சிறந்த வழி இல்லை. இது பெண்களைக் கவருவதற்கு மட்டுமல்லாமல், ஒருவனுக்கு வாழ்வில் நம்பிக்கையையும், உறுதியையும் வழங்குகிறது. ஆனால் சிக்ஸ் பேக், எளிதான விஷயம் அல்ல. இது பெரும்பாலும் சினிமா நட்சத்திரங்களால் மட்டுமே செய்ய முடிகிறது. ஒரு குளத்தைச் சுற்றி சிக்ஸ் பேக்குடன் நடந்து வந்தால் விரும்பிய பெண்ணை எளிதில் கவர்ந்து விட முடியும்.

சிக்ஸ் பேக்கை அடைவதற்கு உடல் அளவிலும், மனதளவிலும் பல முயற்சிகளை செய்ய வேண்டும். அதற்கு முதலில் வாழ்க்கையில் முக்கிய அம்சங்களான உணவு முறை மற்றும் பழக்கவழக்கங்களை மாற்றி அமைக்க வேண்டும். துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். கார்போஹைட்ரெட் உணவுகளுக்கு பதிலாக, நிறைந்த புரதம், குறைந்த கொழுப்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சுவை மிகுந்த ஆலு பரோட்டா மற்றும் பர்கர் போன்றவற்றை தவிர்ப்பது எளிதான விஷயம் அல்ல.

ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மற்றும் உணவு முறையை பின்பற்றி தான், சிக்ஸ் பேக் பெறுவது நல்லது. சரியான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையை பின்பற்றினால் சிக்ஸ் பேக் ஒரு ஆரோக்கியமான உடற்பயிற்சியாக அமையும். ஜிம்முக்கு சென்றோ அல்லது வீட்டிலேயே உடற்பயிற்சிகளை செய்வதன் மூலமோ, உங்கள் அடிவயிற்றை கடினமாகவும், திண்மையாகவும், கட்டுடனும் வைத்திருக்க முடியும்.

சிக்ஸ் பேக் வைப்பதற்கு உதவியாக இருக்கும் உடற்பயிற்சிகள்!!!

வயிற்றிற்கு செய்யப்படும் உடற்பயிற்சிகளை தொடர்ந்து, தினசரி சரிவர செய்வதன் மூலம், அபூர்வமான மற்றும் அருமையான சிக்ஸ் பேக்கை பெறலாம்.
1. காலை மடக்கி கையை தூக்கும் பயிற்சி
காலை மடக்கி கையை தூக்கும் பயிற்சி நேராக படுத்து முழங்காலை மடித்து, கைகளை உங்களுக்கு பின்னால் நேராக நீட்டவேண்டும். பிறகு நீட்டிய கைகளை தலைக்கு மேல் தூக்க வேண்டும். இது பாரம்பரியமான உடற்பயிற்சி. அசைவு கொடுக்கும் போது, மெதுவாகவும், கட்டுப்பாட்டோடும் செய்ய வேண்டும்.

2. தலைகீழான உடற்பயிற்சி 
உங்கள் பின்னால் சாய்ந்து கையை உங்கள் தலைக்கு பின்னால் வையுங்கள். பிறகு முழங்காலை உங்கள் மார்பை நோக்கி, 90 டிகிரி வளைந்து வரும் வரை கொண்டு வாருங்கள். பாதம் நேராக இருந்தாலும், சாய்வாக இருந்தாலும் பரவாயில்லை. உங்கள் வயிற்று சுருக்கத்தின் மூலம் இடையை தரையில் வலுபடுத்தி, உங்கள் காலை மேல் நோக்கி நேராக தூக்கவும். பிறகு காலை இறக்கி அதன் பழைய இடத்தில் வைக்க வேண்டும், ஆனால் உங்களுடைய பாதம் தரையில் படாமல் இருக்க வேண்டும். இது உங்கள் வயிற்றை தொடர்ந்து நன்றாக செயல்பட உதவுகிறது.

3. ஜேக்நைஃப் நிலை 
தரையில் பாயை விரித்து, பின்னால் சாய்ந்து உங்கள் கைகளை தலைக்கு மேல் நீட்டவும். பிறகு ஒரே நேரத்தில் உங்கள் கையையும், காலயும் உயரே தூக்க வேண்டும். உங்கள் கை விரல் நுனி, கால் விரல்களை தொடும் வரை செய்ய வேண்டும். பிறகு பழைய நிலைக்கு கொண்டுவந்து விடவும்.

4. தண்டால் 
உங்கள் கைகளை உங்கள் தோள்பட்டையை சுற்றி 10 இன்ச் தூரத்தில் வைக்கவும். ஷூவில் உள்ள பாத நுனி, தரையில் இருக்க வேண்டும். அப்போது உங்கள் பின்பகுதியை நேராக வைத்துக் கொண்டு,இயல்பாக மூச்சு விட முயல வேண்டும்.

5. சைக்கிள் ஆசனம் 
இந்த ஆசனம் உங்கள் உடலின் பின்புறம் மற்றும் பக்கவாட்டினை கருத்தில் கொள்கிறது. மேலும் மேல் மற்றும் அடி வயிற்று பகுதியையும் இலக்காக கொண்டுள்ளது. மிருதுவான பரப்பளவில் படுத்து (யோகா விரிப்பு) சைக்கிளில் செய்வதை போல பெடலிங்கை காற்றில் செய்ய வேண்டும். மாறுதலுக்கு உங்கள் கணுக்காலை நோக்கி உங்கள் தோள் பட்டையை உயர்த்தவும். இரண்டு பக்கமும் சரிசமமாக இதை செய்ய வேண்டும். இரண்டையும் 12 முறை செய்வது நல்லது.

6. தலை அல்லாமல் உடம்பை மட்டும் சுழற்றும் பயிற்சி 
உட்காரும் நிலையில் வைத்து டம்பெல்ஸ் அல்லது மருத்துவ பந்தை வைத்துக் கொண்டு உடற்பயிற்சி செய்ய வேண்டும். அப்போது முழங்காலை மடக்கி, பாதங்களை தரையில் வைக்க வேண்டும். அடிவயிற்றை இறுக்கிக் கொண்டு, சிறிது பின்னால் சாய வேண்டும். முழங்கையை மடக்கி, எடையை உங்களுக்கு உட்புறமாக வைத்துக் கொள்ள வேண்டும். பின், பக்கத்திற்கு பக்கம் மாற்ற வேண்டும். ஒவ்வொரு சுழற்சியின் போதும், அந்தந்த நிலையில் சிறிது நேரம் நிலைத்து இருக்க வேண்டும்.


=================================

100 மருத்துவக் குறிப்புகள் - Top 100 Medical Tips

1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்... கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது. 

3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.

4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ்தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.

5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியைப் பாதிக்கும்.

6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள்தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.

7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

8. கால் தடுமாறி பிசகிவிட்டால்... உடனே 'கையால் நீவிவிடு' என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவிவிடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.

9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்... நாற்காலியும் செருப்பும்கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா... நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா... என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து 'ரிலாக்ஸ்' செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.

பெண்களுக்காக...
10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.

11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம். 

12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது. 

13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள். 

கர்ப்பக் கால கவனிப்பு!

14. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை 'மெலனின்' எனப்படும் நிறமிகளே! 

15. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது. 

16. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.

17. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.

18. பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

19. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல... உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.

20. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.

21. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

22. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.

23. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.

24. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.

25. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.

26. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது. 

27. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.

28. தாய்ப்பாலைச் சேமித்துக் கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.

29. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில் 
புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.

30. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்... வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு. 

31. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.


உணவே மருந்து!
32. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்... ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்! 

33. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது... உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.

34. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.

35. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.

36. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்... உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும். 

37. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், 
கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

38. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

39. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்... நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

40 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.

41. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்... கண் நோய்கள் நெருங்காது.

42. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

43. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.

44. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

45. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.

46. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

47. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு... இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.

48. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.

மருந்தே வேண்டாம்!
49. இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்... கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.

50. எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.

51. சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.

52. உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும்தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனைத் தராது.

லப்... டப்..!
53. பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.

54. நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்... இதயத்தைப் பற்றி கவலையேபடத் தேவையில்லை.

55. உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள். 

56. மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள். 

57. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். 

கிட்னியைக் கவனியுங்கள்

58. கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.

59. சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி - இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்... உஷார்! 

60. நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது. 

61. காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, 'கிட்னியில் கல்' என்ற பயமே தேவையில்லை. 

பல்லுக்கு உறுதி!
62. பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.

63. பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

64. தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு நீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிருங்கள்.

65. சூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.

66. இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.

67. அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்றுமூலம் ஏற்படக்கூடியது. அதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது.

68. சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி... இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.

69. தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே, முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தப்படுத்துவது அவசியமானது. 

70. முகப்பரு இருந்தால்... உடனே கிள்ளி எறிய விரல்கள் படபடக்கும். ஆனால், அது ஆபத்தானது. முகத்தில் பள்ளங்களை நிரந்தரமாக்கிவிடும். 

71. நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கள், வாழைத்தண்டு சாப்பிடலாம். வெந்தயம் மிக நல்லது. 

72. உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு மட்டும் ஓ.கே! உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.

73. மா, பலா, வாழை, காய்ந்த திராட்சை, சப்போட்டா, பேரீச்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பனை வெல்லம், பனங்கற்கண்டு, தேன், மலைவாழை, லேகியம், பஞ்சாமிர்தம் சேர்க்கவே கூடாது.

74. இரண்டு, மூன்று வெண்டைக் காய்களின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி, நெடுக்குவாட்டில் கீறல்களை போட்டுவிட்டு இரவு முழுக்க டம்ளர் நீரில் மூடி வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் இந்த நீரை மட்டும் அருந்திவர, இரண்டே வாரத்தில் சர்க்கரை குறையும். இது மேற்கத்திய நாடுகளின் எளிய வைத்தியம்

75. உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என சாப்பாட்டின் அளவை திடீரென குறைப்பது ஆபத்து. உடலில் சர்க்கரையின் அளவு வேறுபட்டு, சர்க்கரை நோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

ஜெனரல் வார்டு!
76. சர்க்கரை, டி.பி., கேன்சர், எய்ட்ஸ் ஆகிய நோய்களால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து இருக்கும். இவர்களை எளிதில் நோய் தாக்கும். எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.

77. வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனை செல்ல தாமதமாகும் சூழலில்... உடலில் இருந்து வெளியேறிய நீருக்கு இணையாக உடனே சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரோ, இளநீரோ குடிக்க வேண்டும்.

78. நடு இரவு அல்லது பயண நேரங்களில் திடீர் ஜுரம் அடிக்கிறது. உடனே டாக்டரை பார்க்க முடியாத நிலை. அதற்காக சும்மா இருக்க வேண்டாம். வீட்டில் இருந்தாலோ அல்லது பயணத்தின் இடையிலோ பாராசிட்டமால் மாத்திரை ஒன்றை பயன்படுத்துவது நல்லது. அதன்பிறகு, 6 மணி நேரத்துக்குள் டாக்டரை சந்திப்பது நல்லது.

79. காதுகளை வாரம் இருமுறை மெல்லிய காட்டன் துணிகளால் சுத்தம் செய்ய வேண்டும். சாவி, ஹேர்பின், பட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பட்ஸ் போடும்போது திட அழுக்குகள் அப்படியே அழுத்தப்படுமே தவிர, வெளியில் வராது.

80. வயிற்றுப்போக்கு விடுபட உடனடி உபாயம்... வெறும் கொய்யா இலைகளை மெல்வதுதான்.

81. சாப்பிட்டதும் நெஞ்செரிச்சலா? சிறிது வெல்லம் கரைத்த நீரை அருந்தினால் போதும்.

82. வியர்வை தங்கிய உடையுடேனேயே இருப்பது ஆபத்தானது. அதுவே நோய் தொற்றுக்கான காரணியாக அமைந்துவிடும்.

83. நீங்கள் நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும்கூட சிறுநீர் மஞ்சளாக போகும்.

84. உடலில் ஏதேனும் காயம் அல்லது நகக்கீறல் போன்றவை ஏற்பட்டால், 12 மணி நேரத்துக்குள் தடுப்பு ஊசி (டி.டி.) போடவேண்டும். தடுப்பூசி காலத்தில் இருக்கும், பத்து வயது வரையுள்ள குழந்தைகள் என்றால், இந்த ஊசி தேவையில்லை.

85. மூலம், பவுத்திரம் பாதிப்பு உள்ளவர்கள் கூச்சப்படாமல் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். மலச்சிக்கல் தொடர்ந்தால், இதயத்துக்கே ஆபத்தாகிவிடும்.

நில்... கவனி... செல்!
86. மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்குக் கீழே, நடைபாதை என்று கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து சாப்பிடுவது தவறு. அது... தொற்றுக்கிருமிகளை பரஸ்பரம் உள்ளே - வெளியே எடுத்துச்செல்லும் வேலையைத்தான் செய்யும். 

87. தவிர்க்க முடியாத சூழலைத் தவிர, மற்ற சமயங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்களை நோயாளியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூடாது. 

88. 'போஸ்ட்மார்ட்டம்' என்றாலே பலருக்கும் ஒருவித பயமும் பதற்றமும் இருக்கும். இதன் காரணமாக போஸ்ட்மார்ட்டத்தைத் தவிர்த்துவிட்டால்... பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எதிர்பாராத மரணமென்றால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்வதுதான் எல்லாவற்றுக்கும் நல்லது. பரிசோதனை அறிக்கை இருந்தால்தான் வாரிசுகளுக்கான இன்ஷுரன்ஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான முதலீடுகளை பெறுவதில் சிக்கல் ஏற்படாமலிருக்கும்.

89. ஹோட்டல், ஹாஸ்டல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் தட்டு மற்றும் டம்ளர்களை சரியாக கழுவவில்லை என்றாலும், சாலட்டில் போடப்படும் பச்சைக் காய்கறிகள், பழங்களை சுத்தமான தண்ணீரில் அலசவில்லை என்றாலும்... அமீபியாசிஸ் எனும் தொற்றுக்கிருமி தாக்குதல் ஏற்படும். இதனால், சாப்பிட்டதும் மலம் கழிந்துவிடும். கவனிக்காமல் விட்டால் உடல் மெலிந்து எதிர்ப்புச் சக்தியை முற்றிலுமாக இழக்க நேரிடும்.

90. 'போரடிக்கிறது' என அடிக்கடி காபி, டீ குடிக்கக் கிளம்பாமல்... தூய்மையான தண்ணீரைக் குடிப்பதே நல்லது.

91. ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும்.

92. ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். ஜிலுஜிலு குளிர் நேரமென்றால்... கறுப்பே சிறப்பு.

93. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும். 

94. சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது... அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது. சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது.

எச்சரிக்கை
95. வெற்றிலை-பாக்கு, புகையிலை, சீவல், புகை போன்றவற்றைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவோரின் வாயானது, உட்புறம் மென்மைத் தன்மையை இழந்து, நார்நாராகக் காட்சியளிக்கும். இது, வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

96. இரவு உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் வெறும் வயிறாக இருப்பதால், ஆசிட் நிறைய சுரந்திருக்கும். எனவே, காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும். சரிவர சாப்பிடாமல் பழகிவிட்டால், அது வயிற்றில் புற்றுநோயை உருவாக்கும்.

97. இரவு வெகு நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், மறுநாள் காலையில் வாக்கிங், ஜாகிங் போகக்கூடாது. அது, பயனளிப்பதற்குப் பதிலாகக் கெடுதலையே தரும்.

98. அலர்ஜி - ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தால், செல்லப் பிராணிகளைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள். அலர்ஜி நோய்க்கு, கரப்பான் பூச்சி ஒரு முக்கிய காரணம்.

99. நாற்பது வயதுக்குமேல் தொடர்ச்சியாக அல்சர் தொந்தரவு இருந்தால் என்டோஸ்கோபி பரிசோதனை செய்துவிடுவது நல்லது. ஃபாஸ்ட்ஃபுட் வகையறாக்களைத் தொடவே கூடாது.

100. சுகாதாரமற்ற முறையில் பச்சை குத்துதல் மற்றவர்களுடைய நோயை நமக்கு வாங்கித் தந்துவிடும்.

வரலாற்று சிறப்புமிக்க காதல் கதைகள் - Historical Love Stories


வரலாற்று சிறப்புமிக்க காதல் கதைகள்!!!

காதல் செய்யும் அனைவரும், அந்த அருமையான காதலை சிறப்பிக்கும் வகையில், ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14 ஆம் நாள் காதலர் தினமாக கொண்டாடுகின்றோம். அத்தகைய தினத்தில் அனைத்து காதலர்களும், தம் துணையிடம் காதலை சிறப்பான முறையில் வெளிப்படுத்தி, அவர்களை மகிழ்வித்து, சந்தோஷமாக அந்த தினத்தை கொண்டாடுவார்கள். மேலும் சிலர் இந்த தினத்தில் தம் துணைக்கு ஆச்சரியம் கொடுக்கும் வகையிலும், அவர்கள் மறக்க முடியாத வகையிலும் காதலை வெளிப்படுத்துவார்கள்.

சிலருக்கு காதலில் நம்பிக்கை இருக்காது, பார்த்தவுடன் காதல் என்றால் அனைவரும் சிரிப்பார்கள். சிலர் வெளித்தோற்றத்தை வைத்து தான் காதல் வரும் என்றும், சிலரோ காதல் இந்த வயதில் மட்டும் தான் வரும் என்றும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையில் காதல் மனதில் தோன்றுவது. அத்தகைய காதல் எந்த நேரத்திலும், எவர் மீது வேண்டுமானாலும் வரும். ஏன், அந்த காலத்திலேயே பலர் காதல் செய்துள்ளனர். மேலும் அந்த காதலில் சில வரலாற்று சிறப்புமிக்கதாகவும், யாராலும் மறக்க முடியாததாகவும் உள்ளன. ஏனெனில் அவை அனைத்திலும், ஒரு சுவாரஸ்யம் உள்ளது.

இப்போது அத்தகைய வரலாற்று சிறப்புமிக்க காதல் கதைகள் சிலவற்றை, உங்களுக்காக கொடுத்துள்ளோம். அதைப் படித்து பாருங்களேன்.


விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் 
பிரிட்டிஷ் ராயல் குடும்பத்தில் இருக்கும் ஒரு மறக்க முடியாத காதல் கதை என்றால் அது ராணி விக்டோரியா மற்றும் பிரின்ஸ் ஆல்பர்ட் கதை தான். இந்த காதல் கதையில், இருவரும் சொல்ல முடியாத அளவில் ஒருவரை ஒருவர், வாழ்நாள் முழுவதும் அவ்வளவு காதல் செய்துள்ளனர்.

ஷாஜகான் மற்றும் மும்தாஜ் 
அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் காதல் சின்னங்களுள் ஒன்று. இந்த மஹாலை ஷாஜகான் தன் மனைவி மும்தாஜிற்காக கட்டியுள்ளார். இது ஒரு சோகமான காதல் கதை. இந்த கதையை நிச்சயம் ஒவ்வொருவரும் படிக்க வேண்டும்.

ட்ரிஸ்டன் மற்றும் சோல்ட் 
இதுவும் மிகவும் சோகமான ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒரு காதல் கதை. இது ஒரு உண்மையான காதல் கதை. எப்படியெனில், இவர்கள் உருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்து, இறுதியில் இருவரும் ஒன்று சேராமல், மற்றவர்களை திருணம் செய்து பிரிந்துவிட்டனர் என்பதே ஆகும்.

நெப்போலியன் மற்றும் ஜோஸ்பின் 
இந்த வரலாற்று சிறப்புமிக்க காதல் கதையை வைத்து பல திரைப்படங்கள் மற்றும் புத்தகங்கள் வெளிவந்துள்ளன. ஏனெனில் இதில் நெப்போலியன் தனது மனைவி ஜோஸ்பினை பைத்தியமாக காதலித்து, இறுதியில் ஜோஸ்பினால் ஒரு குழந்தையை தர முடியாது என்ற காரணத்தினால் அவரைப் பிரிந்துவிட்டார்.


பாரீஸ் மற்றும் ஹெலன் 
இந்த காதல் கதையில் மிகுந்த அழகுடைய திருமணமான ராணி ஹெலனும், பாரீஸும் காதல் வயப்பட்டனர். இந்த கதையின் மூலம் காதல் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வரலாம் என்பதே இந்த கதையின் சிறப்பம்சம்.


கிளியோபட்ரா மற்றும் மார்க் ஆண்டனி 
இதுவும் ஒரு புகழ்பெற்ற காதல் கதைகளுள் ஒன்று. இந்த கதையைப் பற்றி அறியாதவர்கள் இருக்கமாட்டார்கள். ஏனெனில் இந்த கதையை வில்லியம் ஷேக்ஸ்பியர் அவ்வளவு அழகாக நாடகத்தின் மூலம், இந்த கதையை உலகம் முழுவதும் வெளிப்படுத்தியுள்ளார். இன்றும் இந்த கதையைப் பற்றி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு சந்தேகம் உள்ளது.


ரோமியோ மற்றும் ஜூலியட் 
எந்த ஒரு காதல் செய்யும் ஜோடிகளும், இந்த சோகமான மற்றும் மறக்க முடியாத காதல் கதையைப் பற்றி அறியாமல் இருக்கமாட்டார்கள். இந்தகதையில் இருவரும் ஒருவரை ஒருவர் உண்மையாகவும், பைத்தியமாகவும் காதலித்து, இறுதி வரை தங்கள் காதலுக்காக தைரியத்துடன் போராடியது, அழியாமல் மக்கள் மனதில் உள்ளது.


சலீம் மற்றும் அனார்கலி 
இதுவும் ஒரு பிரபலமான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க காதல் கதைகளுள் ஒன்று. இதில் இளவரசர் சலீம், தனது வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரியான அனார்கலி மீது காதல் வயப்பட்டார். ஆனால் அவர்களின் காதல் சக்கரவர்த்திக்கு பிடிக்காததால், அனார்கலியை வேசி மகள் என்று கூறி, அவர்களைப் பிரிக்க அனார்கலியை உயிரோடு செங்கல் சுவர் மத்தியில் அமர வைத்து, சமாதி கட்டினார்.

உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight

உடல் எடையை அதிகரிக்க உதவும் 25 வகையான உணவுகளை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து உணவில் சேர்த்து, உடல் எடையை அதிகரித்து, அழகான உடலமைப்பைப் பெறுங்கள்.


1. சால்மன் மீன் 
தினமும் ஒன்று அல்லது இரண்டு சால்மன் மீன்களை சாப்பிடுவதால், உடலுக்குத் தேவையான புரதச்சத்தானது உள்ளிறங்கி, உடல் எடை அதிகரிக்கச் செய்யும். மேலும் அதிலுள்ள இன்றியமையா எண்ணெய்கள் சோம்பலில் இருந்து காத்து, தேவையான நல்ல கொழுப்பை உள்ளிறங்கச் செய்யும்.





2. சூரை மீன் 
சூரை மீன்களில் உள்ள அதிமுக்கியமான கொழுப்பமிலங்கள், உடல் எடையை மட்டும் அதிகரிக்கச் செய்யாமல், உடலை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவும் உதவி புரியும். அதிலும் மதிய உணவில், சீரான முறையில் சூரை மீன் சாலட்டை சேர்த்துக் கொண்டால், கொஞ்சம் வேகமாக உடல் எடையானது அதிகரிக்கும்.




3. இறால் 
கடல் உணவு பிரியர்களா? அப்படியானால் தினமும் இரண்டு முறை இறால்களை சாப்பிடலாம். அதிலுள்ள வளமான ஊட்டச்சத்தும், அத்தியாவசிய அமிலங்களும், உடலில் கலோரிகளை தங்க வைத்து, உடல் எடையை வேகமாக அதிகரிக்கச் செய்யும்.




4. கோழியின் நெஞ்சுக்கறி 
கோழியின் நெஞ்சுக்கறியை க்ரில் செய்து, மயோனைஸ் தடவி மதிய உணவோடு சாப்பிடலாம். இது சுவைமிக்க உணவாக மட்டுமல்லாமல், உடல் எடை கூடவும் உதவி புரியும்.



5. கொத்திய மாட்டிறைச்சி 
சத்துள்ள கொத்திய மாட்டிறைச்சியை சாண்ட்விச் உடன் சேர்த்து உண்டால், உடல் எடை அதிகரிக்கும். ஏனெனில் இதில் உள்ள கொழுப்பு சுலபமாக உள்ளிறங்குவதால், உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.




6. முட்டை 
உடல் எடை அதிகரிக்க வேண்டுமானால், வளமான புரதச்சத்து மற்றும் அமினோ அமிலம் கலந்துள்ள முட்டைகளை சாப்பிட வேண்டும். அதிலும் முட்டையில் உள்ள மஞ்சள் கருவில், அதிக அளவில் நல்ல கொழுப்பிணியும், ஆற்றல் மிக்க கலோரிகளும் நிறைந்துள்ளது. ஆகவே தினமும் இரண்டு முட்டைகள் உண்டால், உடல் எடையை வேகமாக அதிகரிக்கலாம்.



7. சீஸ்/பாலாடைக் கட்டி 
நுரைமிக்க பாலில் செய்யப்பட்ட பாலாடைக் கட்டிகளில், சைவ உணவு உண்ணுபவர்களுக்கு கரைகின்ற புரதச்சத்தானது அதிகம் உள்ளது. புரதம் அதிகம் உள்ளதால், உடம்பில் போதுமான கலோரிகளை கொடுக்கும். அதனால் வேகமாக உடல் எடை அதிகரிக்கும்.




8. சிவப்பு இறைச்சி 
போதுமான அளவில் சிவப்பு இறைச்சியை உண்டால், உடலில் புரதச்சத்து உள்ளிறங்கும். அதனை பல வகையில் சமைத்து சாப்பிடலாம். சாஸ் உடன் சேர்த்து அதனை உணவோடு சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடுவதால் வயிறு நிறைவதோடு மட்டுமல்லாமல், உடல் எடையையும் அதிகரிக்கச் செய்யும்.

.




9. ஓட்ஸ் 
ஒரு பௌல் ஓட்ஸ் கஞ்சி சாப்பிடுவது, ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவாக அமையும். இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், உடலுக்குத் தேவையான அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களை உடனே இது கொடுத்து விடும். ஆகவே ஓட்ஸ் உடன் சேர்த்து க்ரீம், நட்ஸ் மற்றும் வாழைப்பழங்களை சேர்த்து சுவையை அதிகரித்து கொள்ளுங்கள்.


10. கைக்குத்தல் அரிசி 
கைக்குத்தல் அரிசியில் போதுமான அளவு கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே சீரான முறையில் கைக்குத்தல் அரிசியை உண்டால், உடலில் கார்போஹைட்ரேட்டானது சேமித்து வைக்கப்பட்டு, வேகமாக உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.




11. பாஸ்தா 
ஒரு கிண்ணத்தில் சுவைமிக்க பாஸ்தாவை போட்டு சாப்பிட்டால், அது திருப்தியான உணவாக அமையும். அதிலும் இது வயிற்றை மட்டும் நிரப்பாமல், அதிலுள்ள அதிகப்படியான கார்போஹைட்ரேட் உடலில் ஊட்டச்சத்தை ஏற்றி, உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.



12. கோதுமை சப்பாத்தி 
கோதுமையால் செய்யப்பட்ட ஒரு துண்டு சப்பாத்தியில் 13 கலோரிகள் அடங்கியுள்ளது. ஆகவே கோதுமை சப்பாத்தியில் பிடித்த ஜாம், வெண்ணெய் அல்லது மயோனைஸ் தடவி சாப்பிட்டால், சுவைமிக்க காலை உணவாக அது அமையும். இதனால் வயிறும் வேகமாக நிறையும். இது உடலால் மெதுவாக உட்கொள்ளப்படுவதால், சுலபமாக உடல் எடை அதிகரிக்கும்.



13. பீன்ஸ் 
விலங்கில் உள்ள புரதச்சத்துக்கு நிகராக விளங்குகிறது பீன்ஸ். அதனால் அதனை சைவ உணவு உண்ணுபவர்கள் தேர்ந்தெடுக்கலாம். நல்ல சாஸ் உடன் அதை சமைத்தல், அதில் 300 கலோரிகள் அடங்கியிருக்கும். வேண்டுமெனில் அதனுடன் சில பீட்டா ரொட்டிகளையும் சேர்த்துக் கொண்டால், சுவைமிக்க உணவாக அது அமையும். இது உடல் எடையையும் அதிகரிக்கும்.




14. உருளைக்கிழங்கு 
உருளைக்கிழங்கில், போதுமான அளவு கார்போஹைட்ரேட் மற்றும் கலப்புச்சீனி உள்ளது. இதனை உணவில் அதிகமாக பயன்படுத்தினால், சத்தான கொழுப்பாக உடலில் படியும். அதிலும் அவித்த அல்லது வேக வைத்த உருளைக்கிழங்கை சாலட், சாண்ட்விச் மற்றும் இதர உணவுகளோடு சேர்த்து உண்ணும் போது, உடல் எடை அதிகரிக்கும்.


15. சேனைக்கிழங்கு 
அதிக அளவு ஸ்டார்ச் கொண்டுள்ள மற்றொரு உணவாக சேனைக்கிழங்கு உள்ளது. ஒரு முறை அதனை உண்ணும் போது, உடம்பில் 150 கலோரிகள் அதிகரிக்கும். அதனை அடிக்கடி சத்தான உணவோடு சேர்த்து சமைத்து சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும்.


16.அவகேடோ (வெண்ணைப் பழம்) 
பட்டர் ப்ரூட் என்றழைக்கப்படும் இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பமிலம் அதிகம் நிறைந்துள்ளது. இதனை சூப், சாலட் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். இதனால் உடலில் ஊட்டச்சத்தை ஏற்றி, தேவையான கொழுப்பையும் சேர்க்கும். இதனால் ஆரோக்கியமான முறையில் உடல் எடை அதிகரிக்கும்.





17. வேர்க்கடலை வெண்ணெய் 
அதிக அளவில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பமிலம் நிறைந்துள்ள இயற்கையான வேர்க்கடலை வெண்ணெய், உடல் நல ஆரோக்கியத்துக்கு பெரிதும் துணை புரிகிறது. அதிலும் அதனை பிரட் அல்லது பிஸ்கட்களில் தடவி உண்டால், உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.




18. பாதாம் வெண்ணெய் 
ஆரோக்கியமான புரதம் நிறைந்த நட்ஸ் வகையாக விளங்குகிறது பாதாம் வெண்ணெய். மேலும் இதில் அதிமுக்கிய கொழுப்பமிலங்களும் நிறைந்துள்ளது. இதனை சாலட், பிரட் மற்றும் டெசர்ட்டுகளில் சேர்த்த சாப்பிட்டால், சருமம் பளபளப்பாகவும், முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும். அதனுடன் சேர்த்து உடல் எடையும் அதிகரிக்கும்.




19. ஆலிவ் எண்ணெய் 
சாலட்களில் ஆலிவ் எண்ணெயை ஊற்றி சாப்பிடுவது ஆரோக்கியமான உணவாக விளங்கும். அதில் அதிக அளவு கலோரிகள் மட்டுமல்லாமல், லினோலெயிக் அமிலமும் அதிகமாக உள்ளது. ஆகவே இந்த ஆலிவ் எண்ணெயை உணவில் சேர்ப்பதால், உடல் எடையை அதிகரிப்பதோடு, இதய நோய்கள் வராமலும் காக்கும்.





20. பாதாம் பருப்பு 
பாதாம் என்பது நரம்பு வளர்ச்சிக்கு பயன்படும் உணவாகும். இதனை உடல் எடை கூடுவதற்கான ஆரோக்கியமான சில விஷயங்களுக்காகவும் பயன்படுத்தலாம். தினமும் ஒரு கை பாதாம் பருப்புகளை உண்ணுவதால், உடலின் செயல்பாடு பாதுகாக்கப்பட்டு, நரம்பு திடமாக செயல்படும்.


21. ஆளி விதை 
ஆளி விதையில் அதிக அளவில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பமிலம் அடங்கியுள்ளது. இது உடல் ஆரோக்கியத்தை காத்து, உடலை சீரான முறையில் செயல்பட உதவும். எனவே தினமும் போதுமான அளவை ஆளி விதையை உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் ஆரோக்கியம் பாதிக்காமல் உடல் எடையை அதிகரிக்க உதவி புரியும்.


22. முந்திரி 
நல்ல உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு கை முந்திரி பருப்பை சாப்பிடுங்கள். அதிலுள்ள முக்கிய எண்ணெய்கள், உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். மேலும் அணுக்களின் அடுக்குகளில் உய்வூட்டி, சருமம் மென்மையானதாக வைத்துக் கொள்ள உதவும்.




23. வாழைப்பழம் 
வேகமாக உடல் எடை அதிகரிக்க வேண்டுமானால், தினமும் இரண்டு அல்லது கூடுதல் வாழைப்பழங்களை சாப்பிட வேண்டும். வாழைப்பழங்களில் கலப்புச்சீனியும், பழவெல்லமும் சரியான கலவையில் உள்ளது. மேலும் கரையும் கார்போஹைட்ரேட்டுகளும் உள்ளது. இது உடனடி சக்தியை அளிப்பதோடு மட்டுமல்லாமல், உடல் எடை அதிகரிக்கவும் உதவி புரியும்.




24. தேங்காய் பால் 
தேங்காய் பாலில் அதிக அளவு டயட் எண்ணெய்கள் நிறைந்துள்ளது. மேலும் இது பலவகையான உணவு வகைகளுக்கு சுவையை கூட்டவும் பயன்படுகிறது. தேங்காய் பாலில் செய்த உணவில் அதிக கலோரிகள் இருக்கும். எனவே இதனை சாப்பிட்டால், உடல் எடையை அதிகரிக்கும்.




25. உலர் திராட்சை 
உலர் திராட்சையில் 99 கலோரிகள் அடங்கியுள்ளது. ஒரு கை உலர் திராட்சையை சாப்பிட்டால், உடலில் ஆரோக்கியமான கலோரிகள் நிறையும். மேலும் நார்ச்சத்தும் தேங்கும். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, ஆரோக்கியமான கலோரிகளை அதிகரிக்கும். இதனால் வேகமாக உடல் எடை அதிகரிக்கும்.


 தனுடன்50 கிராம் வெந்தயத்தை வேக வைத்து... அதனுடன் ஒரு மேசைக்கரண்டி நெய், வெல்லம் சேர்த்து.... 101 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஈஸ்ட்ரோஜென் அதிகரித்து உடம்பு குண்டாகிவிடும்...