வீட்டு வைத்திய குறிப்புகள்

வீட்டு வைத்திய குறிப்புகள்:-


சீரகம்:

சீரகத்தைப் பொன்வறுவலாக வறுத்து தூள் செய்து கொதிநீரில் இட்டு காய்ச்சிக் குடித்தால் உண்ட உணவை சீரணமாக்கி பசியைத் தூண்டுவதுடன் உணவுப்பாதையையும் சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. கேரளத்து மக்கள் எல்லோரது வீட்டிலும் இந்த சீரக வெள்ளம் இருக்கும்.

தொண்டைக்கட்டிற்கு:

அதிமதுரத்தை நாட்டு மருந்து கடையில் வாங்கி இடித்து சலிக்கவும். ஒரு வேலைக்கு அரை ஸ்பூன் எடுத்து தேன் கலந்து குழைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டைக்கட்டு சரியாகும்.

அஜீரணம்:

அரை ஸ்பூன் இஞ்சி சாறு, அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு, அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் அஜீரனக் கோளாறுகள் மறையும்.

கால் ஆணிக்கு:

மருதாணி இலைகள், சிறிது வசம்பு, சிறிய மஞ்சள் துண்டு மூன்றையும் நன்கு அரைத்து ஒரு வெற்றிலையில் வைத்து கால் ஆணிடில் வைத்து ஒரு துணியால் கட்டி வந்தால் ஒரு வாரத்தில் குணமாகி விடும்.

தேமல் மறைய:

புடலங்காயை 6 அங்குலத்திற்கு வெட்டி, குடலை நீக்கி, சீயக்காயை அரைத்து அதனுள்ளே வைத்து, வெய்யிலில் ஒரு நாள் காய வைக்கவும். மறு நாள் அதை அரைத்து தேமல் உள்ள இடங்களில் தடவி இ மணி நேரம் ஊறவைத்து வெந்நீரில் குளிக்கவும். தொடர்ந்து இது போல செய்து வந்தால் சில தினங்களில் தேமல் மறைந்து விடும்.

தலைவலி:

ஒரு ஸ்பூன் கிராம்பையும் ஒரு சிட்டிகை கல் உப்பையும் அரைத்து பற்று போட்டால் தலைவலி சரியாகும்.

விக்கலுக்கு:

சீனியை வாயில் போட்டு மெதுவாக உறிஞ்சவும். விக்கல் நின்று விடும். 2 நிமிடம் கழித்து மறுபடியும் இது போல செய்யலாம். குழந்தைகளின் விக்கலுக்கு விரலை நீரில் நனைத்து சீனியில் தொட்டு வாயில் வைக்கவும்.

மலச்சிக்கல்:

வெங்காயத்தையும் முள்ளங்கியையும் அடிக்கடி சமையல் சேர்த்துக்கொள்ளவும். அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு சம பங்கு எடுத்து பவுடர் செய்து ஒரு ஸ்பூன் எடுத்து தேனில் குழைத்து சாப்பிடவும்.

உயர் இரத்த அழுத்தம் பற்றிய தகவல்கள்

உயர் இரத்த அழுத்தம் பற்றிய தகவல்கள்:-


ஓர் ஆண் அல்லது பெண்ணுக்கு அவருடைய வயதுக் கேற்ப இருக்க வேண்டிய இயல்பான அளவைவிடக் கூடுதலாக இருக்கும் இரத்த அழுத்தமே, உயர் இரத்த அழுத்தம் எனப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னர், இரத்த அழுத்தம் என்றால் என்ன என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம். தமனிக் குழாயில் (artery) பாய்ந்து செல்லும் இரத்தம், குழாயின் சுவர்ப்புறப் பரப்பின் ஓர் அலகில் ஏற்படுத்தும் அழுத்தமே (pressure in unit area) இரத்த அழுத்தம் எனப்படுகிறது.

இரத்த அழுத்தம் இரண்டு எண்களால் ஒன்றின் கீழ் ஒன்றாக ஒரு வகுத்தல் போல பதிவு செய்யப்படுகிறது. மேலிருக்கும் எண் இரத்த ஓட்டத்தின் போது இதயச் சுருங்கியக்கத்தின் காரணமாக ஏற்படும் இரத்த அழுத்த (systolic pressure) அளவாகும்; கீழே இருக்கும் எண் இதய விரிவியக்கத்தின் காரணமாக (diastolic pressure) உண்டாகும் இரத்த அழுத்த அளவாகும். எடுத்துக்காட்டாக ஒருவரின் இரத்த அழுத்த அளவு 120/80 (மில்லி மீட்டர் பாதரச அளவு - mm Hg) எனக் கொள்வோம். இதயச் சுருங்கியக்கத்தின் போது அவருடைய இரத்த அழுத்தம் உயரளவான 120மி.மீ. பாதரச அளவும், விரிவியக்கத்தின் போது 80 மி.மீ பாதரச அளவும், உள்ளது எனப் பொருள்படும். ஒருவருடைய வயது, நாள்தோறும் அவர் மேற்கொள்ளும் உடலுழைப்பு மற்றும் உடற்பயிற்சி, கடைபிடிக்கும் உணவுப் பழக்கம் ஆகியவையே அவரது இரத்த அழுத்ததில் தாக்கத்தை ஏற்படுத்துவனவாகும்.

இரத்த அழுத்தத்தை அளவிடும் முறை
இரத்த அழுத்தத்தை அளவிடுவதற்கு குருதி அழுத்தமானி (sphygmomanometer) என்னும் கருவி பயன்படுத்தப்படுகிறது. பாதரச அழுத்தமானியுடன் (Mercury Manometer) இணைக்கப்பெற்ற காற்றினால் உப்பும் ஒரு கச்சையை (inflatable cuff) நோயாளியின் தோளுக்குக் கிழே மேற்புறக் கையைச் சுற்றி நன்கு கட்டுவர். இதனால் கையிலுள்ள தமனிக் குழாய் அழுத்தப் பெற்று இரத்த ஓட்டம் தற்காலிமாகத் தடைபடுகிறது. அடுத்து உப்பிய கச்சையிலுள்ள காற்று வெளியேற்றப்படும். இதே வேளையில் இரத்த அழுத்தத்தை அளவிடுபவர், ஸ்டெதெஸ்கோப் எனப்படும் மார்பாய்வியை முழங்கையிலுள்ள மேற்கைத் தமனியில் வைத்து, அத்தமனி வழியே இரத்தம் செல்லத் துவங்கும் போது ஏற்படும் நாடித் துடிப்பு ஒலிகளைக் கூர்ந்து கவனிப்பார். தமனியில் ஏற்படும் அழுத்தம், கச்சையின் அழுத்ததை விட அதிகமாகும் வரை துடிப்பு ஒலிகள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கும். முதல் ஒலியின் போது ஏற்படும் அழுத்த அளவு, இதயச் சுருங்கியக்க அழுத்தமாகும்; இறுதியாகக் கேட்கும் ஒலியின் போது உண்டாகும் அழுத்த அளவு, இதய விரிவியக்க அழுத்தமாகும். நோயாளியின் உட்கார்ந்த அல்லது படுத்த நிலையில் இரத்த அழுத்தம் மும்முறை அளவிடப்படுதல் வேண்டும்; கடைசி அளவைப் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இரத்த அழுத்தத்தை அளவிடுவதற்கு குறைந்தது அரை மணி முன்பு வரை, புகை பிடித்தல், காஃபி அருந்துதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். நம் அனைவருக்கும் ஏதோ ஒரு காரணத்திற்காக இரத்த அழுத்த அளவீடு மருத்துவரால் மேற்கொள்ளப்பட்டிருக்கும்; எனவே இதைப்பற்றி நாம் அனைவரும் அறிந்துள்ளோம் என்பதில் ஐயமில்லை.

உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன ?
இரத்த அழுத்தம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உயரளவிலேயே நிலையாக இருந்தால், அது உயர் இரத்த அழுத்தமாகக் கருதப்படுகிறது. இதனை ஹைப்பர்டென்ஷன் என ஆங்கிலத்தில் கூறுவர். இதயச் சுருங்கியக்க அழுத்தம் 160 மி.மீ பாதரச அளவுக்கும், இதய விரிவியக்க அழுத்தம் 95 மி.மீ. பாதரச அளவுக்கும் சமமாகவோ அல்லது கூடவோ இருந்தால் அந்நிலையை உயர் இரத்த அழுத்த நிலை எனக் கூறலாம் என்று உலக நல்வாழ்வு நிறுவனத்தின் (World Health Organization - WHO) நிபுணர் குழு கருதுகிறது. ஆனால் மருத்துவ அறிஞர்களிடையே, உயர் இரத்த அழுத்தத்தின் துவக்க நிலையை அறுதியிடுவதில் பலவகைக் கருத்துகள் நிலவுகின்றன என்றே கூற வேண்டும். பதினெட்டு வயதுக்கு மேற்பட்டோரிடையே உயர் இரத்த அழுத்தத்தைக் கண்டுபிடித்தல், தடுத்தல், மதிப்பீடு செய்தல் மற்றும் சிகிச்சை அளித்தலுக்கான அமெரிக்கத் தேசிய இணைப்புக் குழுவினரின் ஆறாவது பொது அறிக்கை, இரத்த அழுத்தத்தைக் கீழ்க்கண்டவறு வகைப் படுத்துகிறது:
இரத்த அழுத்த வகைப்பாடு இதயச் சுருங்கியக்க அழுத்தம் (மி.மீ. பாதரச அளவு) இதய விரிவியக்க அழுத்தம் (மி.மீ. பாதரச அளவு) 

உகந்த நிலை <120 <80

இயல்பு நிலை <130 <85

இயல்புக்கு மேற்பட்ட நிலை: 130 - 139 85 - 89

உயர் இரத்தஅழுத்தம் நிலை 1: 140 - 159 90 - 99 

உயர் இரத்தஅழுத்தம் நிலை 2: 160 - 179 100 - 109 

உயர் இரத்தஅழுத்தம் நிலை 3: 180 - 209 110 - 119 



உயர் இரத்த அழுத்தத்தைக் கண்டுபிடித்தல்

உயர் இரத்த அழுத்தத்துக்கு ஆட்பட்ட ஒருவர், வாழ்நாள் முழுதும் அதனோடு வாழ வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார். மேலும் உயர் இரத்த அழுத்தம் எவ்வித அறிகுறியும் இன்றி, உள்ளுறை நோயாகவே பெரும்பாலோரிடம் இருந்து வருகிறது; மிகச் சிலரிடம் மட்டுமே அதன் தாக்கம் வெளிப்படையாகத் தெரிகிறது. எனவே ஒவ்வொருவருக்கும் உயர் இரத்த அழுத்தச் சோதனை நடத்துவது இன்றியமையாததாகும்.

இதயத்துக்குக் கடுமையான கூடுதல் பணிச் சுமையை அளிப்பதால் உயர் இரத்த அழுத்தம் மிகவும் அபாயமானதாகக் கருதப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் தொடர்ந்து இருக்குமானால், உடலின் பல பகுதிகள் செயற்பாட்டை இழந்து, இறுதியில் இறப்பு தவிர்க்க முடியாததாகி விடும். எனவே துவக்க நிலயிலேயே இந்நோயைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவது முக்கியம்.

முன்பு இதய விரிவியக்க அழுத்தமே, உயர் இரத்த அழுத்தத்தின் முக்கிய காரணியாகக் கருதப்பட்டது; ஆனால் தற்போதைய ஆய்வுகளின்படி இதய சுருங்கியக்க அழுத்தமே, இதயக் குருதி நாளம் சார்ந்த நோய்களுக்கு (cardiovascular morbidity) முக்கிய காரணமாகக் கருதப் படுகிறது. தகுதியான மருத்துவரிடம் முறையான சிகிச்சையைப் பெறுவதன் வாயிலாக இந்நோயின் இன்னல்களிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள இயலும். 

உலக நல்வாழ்வுக் கழகப் புள்ளிவிவரப்படி நகரத்தில் வாழும் ஆண்களில் 1000 க்கு 60 பேரும், பெண்களில் 70 பேரும் உயர் இரத்த அழுத்த நோய்க்கு ஆளாகி இருப்பதாகக் கூறப்படுகிறது; கிராமப் புறங்களில் இதன் தாக்கம் குறைவாகவே உள்ளது. வளர்ந்த மற்றும் வளர்முக நாடுகளில் தமனி உயர் இரத்த அழுத்த நோய் (arterial hypertension) பொது மக்களின் நல்வாழ்வில் பெரும் பிரச்சினைகளை உருவாக்குவதாக உள்ளது எனலாம்.

இந்த நோயானது, புவியியல் சார்ந்தும், மரபு வழிப்பட்ட பண்புகளைச் சார்ந்தும் இருப்பதாக ஆய்வுமுடிவுகள் கூறுகின்றன. மேலும் குடும்பத்தில் வழிவழியாக இந்நோய் தாக்கும் என்றும் கருதப்படுகிறது.
உயர் இரத்த அழுத்தத்தின் வகைகள்

அடிப்படை உயர் இரத்த அழுத்தம் (Essential hypertension): சாதாரணமாக 95% மக்களுக்கு இந்த வகையான உயர் இரத்த அழுத்தமே காணப்படுகிறது. இது வருவதற்கான அடிப்படைக் காரணமாக எதையும் கூறுவதற்கில்லை.

துணைநிலை உயர் இரத்த அழுத்தம் (Secondary hypertension): ஏறக்குறைய 5% உயர் இரத்த நோயாளிகள் இவ்வகையில் அடங்குவர். இதற்கான சில அடிப்படைக் காரணங்கள் இருப்பதுண்டு. சிறுநீரகம் தொடர்பான நோய்கள், நாளமில் சுரப்பிக் குறைபாடுகள், சில கருத்தடை மாத்திரைகள் ஆகியன உடலில் குருதிச் சமநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படக்கூடும்; கருவுற்ற நிலையில், பெண்களுக்கு இரத்த அழுத்தம் உயர்வதும் உண்டு.

வெள்ளாடை உயர் இரத்த அழுத்தம் (White coat hypertension): மருத்துவரை வெள்ளை ஆடையில் கண்டவுடனே, தற்காலிகமாகத் திடாரென்று சிலருக்குத் தோன்றும் இரத்த அழுத்தம் இது. மருத்துவ மனையை அடைந்தவுடனே, அச்சம் காரணமாக உண்டாவது இவ்வகை இரத்த அழுத்தம். சுமார் 20% நோயாளிகளுக்கு இவ்வகை இரத்த அழுத்தம் உண்டாவதாகக் கண்டறிந்துள்ளனர்.

தீவிர உயர் இரத்த அழுத்தம் (Accelerated hypertension): அண்மையில் இருந்த உயர் இரத்த அழுத்தத்தைவிட, கூடுதலாகத் தற்போது ஏற்பட்டிருக்கும் உயர் இரத்த அழுத்த அளவாகும் இது. கண்களுக்குப் பின்புறம் அமைந்துள்ள ஒளி நரம்பின் இரத்த நாளம் சிதைவுற்று அதனால் உண்டாகும் கண்குமிழ் அழற்சியினோடு (papilledema) தொடர்புடையது இவ்வகைத் தீவிர உயர் இரத்த அழுத்தமாகும்.

அபாயநிலை உயர் இரத்த அழுத்தம் (Malignant hypertension): கட்டுப்படுத்த முடியாத, கடுமையான சிக்கல் நிறைந்த உயர் இரத்த அழுத்த வகையாகும் இது. இந்நிலையில் இரத்த அழுத்தம் மிக உயர்ந்த நிலையை அடைந்துவிடும் (இதயச் சுருங்கியக்க அழுத்தம் 200 மி.மீ. பாதரச அளவுக்கும், 

இதய விரிவியக்க அழுத்தம் 130 மி.மீ. பாதரச அளவுக்கும் கூடுதலான நிலையை அடைவதுண்டு.) அபாயநிலை உயர் இரத்த அழுத்தமானது, உடலுறுப்புகள் சிதைந்து சேதமடைதல், விழித்திரைக் குருதிப்போக்கு ஆகியவற்றிற்கு வழி வகுக்கும். எனவே இவ்வகை உயர் இரத்த அழுத்தத்திற்கு, நெருக்கடி நிலை மருத்துவச் சிகிச்சை அளிப்பது இன்றியமையாதது. 

இடர்க் காரணிகள் (Risk factors)
உயர் இரத்த அழுத்தமே பல்வேறு நோய்களுக்கான இடர்க்காரணியாக அமைகிறது. இருப்பினும் உயர் இரத்த அழுத்தம் உண்டாவதற்கான இடர்க் காரணிகளை இருவகையாகப் பிரிக்கலாம். ஒன்று தடுக்கக் கூடிய அல்லது மாற்றக் கூடிய இடர்க் காரணிகள்; மற்றொன்று தடுக்க இயலா இடர்க் காரணிகள்.

தடுக்க இயலா இடர்க் காரணிகள் (Non-modifiable Risk Factors)

அ) வயது: ஆண், பெண் இரு பாலருக்கும் வயது கூடக் கூட, இரத்தம் அழுத்தம் கூடுவதும் தவிர்க்க இயலாததாகிறது. 

ஆ) மரபு வழிக் காரணங்கள்: ஆய்வு முடிவுகளின்படி, இயல்பான இரத்தம் அழுத்தம் உள்ள பெற்றோருக்குப் பிறப்பவர்களில், 3% பேருக்கு உயர் இரத்த அழுத்தம் உண்டாகிறது என்றால், உயர் இரத்தம் உள்ள பெற்றோருக்குப் பிறப்பவர்களில் 45% பேருக்கு அது உண்டாகிறது. 

தடுக்கக் கூடிய இடர்க் காரணிகள் (Modifiable Risk Factors):

அ) உடற் பருமன்: உடலின் எடை கூடக் கூட, உயர் இரத்த அழுத்தத்திற்கு ஆளாவதும் தவிர்க்க இயலாததாகிறது.

ஆ) உணவில் உப்பின் அளவு: உணவில் உப்பை மிகுதியாகச் சேர்த்துக் கொள்ளுவதாலும் உயர் இரத்த அழுத்தத்திற்கு ஆட்பட வேண்டியுள்ளது. ஒரு நாளைக்கு 7 - 8 கிராம் உப்பு என்பது உயர்ந்த அளவாகும். மிகப் பழங்காலத்தில் குறைந்த அளவு உப்பினை உட்கொண்ட நமது சமூகத்தில் உயர் இரத்த அழுத்தம் என்பது கேள்விப்படாத நோயாக இருந்தது. 

இ) அன்றாட உணவுப் பழக்கம்: கொழுப்புப் பொருட்கள், குடிப்பழக்கம் ஆகியன உயர் இரத்த அழுத்தை ஊக்குவிக்கும் உணவுப் பழக்கங்களாகும்.

ஈ) உடலுழைப்பு: தொடர்ந்த உடலுழைப்பு அல்லது உடற்பயிற்சியினால் உடலின் எடை குறைவதோடு, இரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும். 

உ) பதற்ற நிலை: உளவியல் காரணங்களும், மன உளைச்சலும், மூளைக்குத் தரும் கடுமையான உழைப்பும் கூட உயர் இரத்த அழுத்தத்திற்குக் காரணங்களாக அமைகின்றன; எனவே அமைதி, மனக் கட்டுப்பாடு, ஆகியன மிகவும் இன்றியமையாதவை.

உயர் இரத்த அழுத்தத்தினால் விளையும் சிக்கல்கள்:
மூளை வாத நோய் (Stroke): உயர் இரத்த அழுத்தத்தால், குருதிக் குழாயில் சேதமேற்பட்டு, மூளையில் குருதிப் போக்கு ஏற்படுவதால் இந்நோய் உண்டாகிறது. இது உயிருக்கே உலை வைக்கக்கூடிய நோயாகும்.
உயர் இரத்த அழுத்த மூளை நலிவு நோய் (Hypertensive Encephalopathy): பேச்சுக் கோளாறு, பார்வைக் கோளாறு, அசாதாரணப் புலனுணர்வு, வலிப்பு நோய், மனநிலை மாற்றம் ஆகிய நோய்களும், நரம்புத் தொடர்பான நோய்களும் இதன் காரணமாக உண்டாகும்.

உயர் இரத்த அழுத்த விழித்திரை நோய் (Hypertensive Retinopathy): விழித்திரை அருகிலுள்ள இரத்த நாளங்கள் சுருங்கி, இரத்த ஓட்டம் குறைவதோடு, இரத்தக் கசிவும் ஏற்படும் வாய்ப்பு உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு உண்டாகிறது.

இதயக் கோளாறுகள் (Cardiac Complications): உயர் இரத்த அழுத்தம் என்பதே, இதயத்திற்குச் செல்லும் குருதி குறைபாட்டுக்கு வழிவகுக்கும் நோயாகும். உயர் இரத்த அழுத்தம் இதயத்திற்கு மிகுந்த அழுத்தத்தைத் தருகிறது. இதனால் இடது வென்ட்ரிகல் விரிவடைந்து, இறுதியாக அது தன் பணியைச் செய்ய இயலாமல் இதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம் நின்றுவிடும். 

சிறுநீரகப் பிரச்சினைகள் (Kidney Problems): நீண்ட கால உயர் இரத்த அழுத்தம், சிறுநீரகம் தனது பணியைச் செய்ய இயலாமல் பழுதடைந்து போவதற்கு வழி வகுக்கும். 

உயர் இரத்த அழுத்தத்திற்குச் சிகிச்சை அளித்தல்:
உயர் இரத்த அழுத்த நோயாளிக்குச் சிகிச்சை அளிப்பதன் முக்கிய நோக்கம், நோய்க்கு உரிய இடர்க் காரணிகளைக் கண்டறிந்து, அவற்றிற்கு உரிய மருத்துவ முறைகளை மேற்கொண்டு, நோயாளி நீண்ட நாள் வாழ வழி வகுத்தலே ஆகும். துணைநிலை உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு, உரிய மருந்துகளைத் தருவதோடு, நோய்க்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து, அவற்றிற்கும் உரிய சிகிச்சை அளிப்பது மிகவும் முக்கியம். உயர் இரத்த அழுத்த நோய் வராமலே தடுப்பதற்கான வருமுன் காக்கும் கீழ்க்கண்ட முறைகளைப் பின்பற்றுதல் நலம்.

உணவு முறை: குடிப் பழக்கத்தை முற்றிலும் தவிர்த்தல், சரியான உணவை உட்கொள்ளுதல் ஆகிய இரண்டும் உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு உகந்த உணவுப் பழக்கமாகும். கொழுப்புப் பொருட்களை உணவில் குறைத்துக் கொள்ள வேண்டும். நார்ச் சத்து நிறைந்த உணவு மிகவும் நல்லது. குறைந்த அளவு உப்பையே உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். எண்ணெயில் பொரித்த, உப்பு மிகுந்த, தின்பண்டங்களையும் தவிர்க்க வேண்டும்.

புகை பிடித்தல்: புகை பிடிக்கும் பழக்கத்தை அறவே தவிர்த்தல் இன்றியமையாதது.
உடற்பயிற்சியும், ஓய்வும்: (குறைந்தது வாரத்திற்கு மூன்று நாட்கள், சுமார் 20 நிமிட நேரம்) தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது மிகவும் தேவையான ஒன்று; விரைந்து நடத்தல், நீச்சல் போன்றவை உடலைத் தகுதியாக வைத்துக்கொள்வதோடு, இரத்த அழுத்தத்தையும் குறைக்க வழி வகுக்கும்.

ஆழ்நிலைத் தியானம், மூச்சுப் பயிற்சி, யோகப் பயிற்சி ஆகியவையும் இரத்த அழுத்ததைக் குறைக்கப் பயன்படுகின்றன. இவற்றால் உடலுக்கு நல்ல ஓய்வும் கிடைக்கும். ஆனால் இப்பயிற்சிகளின் வாயிலாக மருந்து எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க இயலாது; ஓரளவு மருந்தின் அளவையும், வீரியத்தையும் குறைக்கலாம். 

உயர் இரத்த அழுத்தத்திற்கான மருத்துவமனைச் சோதனைகள்:
உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக மருத்துவரால் உறுதி செய்யப்பட்டவர்களுக்கு, தொடர்ந்து சில மருத்துவ நோயியல் ஆய்வுகளை அவ்வபோது நடத்துவது இன்றியமையாதது. அவை பின்வருமாறு:
குளுகோஸ், புரோட்டின், சிறுநீர்க் குருதி ஆகியவற்றிற்கான சிறுநீர் பகுப்பாய்வு
பிளாஸ்மா யூரியா மற்றும் கிரியேட்டினைன் ஆகியவற்றைத் தீர்மானித்தல்
பிளாஸ்மா கொழுவியம்/டிரைகிளிசரைட் ஆகியவற்றைத் தீர்மானித்தல்
மார்பின் எக்ஸ் ரே படம்
இதய மின்னியக்கப் பதிவு (Electrocardiograph - ECG)
பிளாஸ்மா எலெக்ட்ரோலைட்கள்

உயர் இரத்த அழுத்தம் துவக்க காலத்தில் எவ்வித அறிகுறியும் இல்லாமல் அமைதியாக இருப்பதால், அதனைக் கண்டுபிடிப்பது சற்றுக் கடினம். மிகுந்த சினம் கொள்வதும், அடிக்கடி தலைவலி வருவதும் உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் என்பது உறுதி செய்யப்படாத நம்பிக்கை. ஆனால் சிகிச்சை பெறாத நிலையில், உயர் இரத்த அழுத்தம் பல்வேறு சிக்கல்களுக்கு வழியுண்டாக்கி, உடனிருந்து உயிரையே வாங்கிவிடும் என்பது மட்டும் உறுதி.

தேவையான மருத்துவச் சிகிச்சை, முறையான உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை, தகுந்த உடற்பயிற்சி ஆகியவை வாயிலாக உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இயல்பாக நீண்ட காலம் வாழ இயலும் என்பதில் ஐயமேதுமில்லை.

இரத்த அழுத்தம்
வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகளில், இறப்பு விகிதம் அதிகரிப்பதற்கு, ரத்த அழுத்த நோய் முக்கியமான காரணமாக உருவெடுத்துள்ளது.

அமெரிக்க மருத்துவத்துறையால் வெளியிடப்படும் ஹைப்பர் டென்சன் என்ற மருத்துவ இதழ் இரத்த அழுத்தம் குறித்த கடந்த 1976ம் ஆண்டு முதல் அவ்வப்போது விரிவான அறிக்கையினை வெளியிட்டு வருகிறது. கடந்த 2003ம் ஆண்டு கடைசியாக இந்த இதழில் வெளியிட்டுள்ள உயர் ரத்த அழுத்த நோய் தடுப்பு, ஆய்வு, பரிணாமம் மற்றும் சிகிச்சை குறித்து வெளியிடப்பட்ட 7 வது அறிக்கையில் (The seventh report of the joint national committee on prevention, detection, evaluation and treatment of high blood pressure – JNC) மருந்தை விட, அன்றாட வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.

உடல் எடையைக் குறைப்பது, உணவுக் கட்டுப்பாடு, தேவையான கலோரிகளை உட் கொள்வது போன்ற நடைமுறைகளையே, ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முக்கிய வழி முறைகளாக இந்த அறிக்கை பரிந்துரை செய்கிறது.

இவற்றுடன் சீரான உடல் இயக்கத்தையும் அந்த அறிக்கை வலியுறுத்துகிறது. அதாவது ஒரே இடத்தில நீண்ட நேரம் அமர்ந்திருக்காமல் உடலுக்கு அவ்வப்போது அசைவும், வேலையும் கொடுத்து வந்தால், ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதை இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இதேபோன்று பிரிட்டிஷ் உயர்ரத்த அழுத்த கழகமும், சில ஆலோசனைகளை வழங்கி உள்ளது. ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கான சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிக்கைகள் தெரிவிக்கும் வழிமுறைகள் குறித்து இங்கே பார்ப்போம். ரத்த அழுத்த நோயால் பாதிக்கப் பட்டவர்களும், தங்களது முன்னோர்களுக்கு ரத்த அழுத்த நோய் உள்வர்களும் இந்த பரிந்துரைகளைக் கவனத்தில் கொள்வது நல்லது.

அவ்வப்போது குறித்த கால இடைவெளியில் ரத்த அழுத்தத்தின் நிலையை அறிந்து கொள்வது மிக முக்கியம். இதன் மூலம் உடலில் ரத்த அழுத்தத்தின் நிலையை அறிந்துகொள்ள இயலும்.

உடல் எடைக்கும், ரத்த அழுத்த நோய்க்கும் நெருங்கிய தொடர்புண்டு. எனவே உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். அதிகமான உடல் எடையைக் குறைப்பதில் கவனம் தேவை. தேவையான எடையைக் குறைத்துவிடக் கூடாது.

சோடியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அடங்கிய உப்புக்கும், உடல் பருமனடைவதற்கும் நெருங்கிய தொடர்புள்ளது. உடல் பருமனடைந்தால் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே உணவில் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்வது நல்லது. ஒரு நாளைக்கு 6 கிராம் அளவுக்கும் குறைவாக சேர்த்துக்கொள்ளலாம்.

ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்த உணவுக் கட்டுப்பாடு அவசியம் என்று ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கான உணவுக்கட்டுப்பாடு ஆய்வில் (Dietary approach to stop hypertension study – DASH) கண்டறியப்பட்டுள்ளது. வழக்கமாக உட் கொள்ளும் கொழுப்புச் சத்தைவிட 35 சதவீதம் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். வேகவைக்கப்படாத காய்கறிகளும், பழங்களும் உணவில் அதிகம் இடம்பெற வேண்டும். ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் பால், நெய், தயிர், மோரைக் குறைத்தல் அல்லது தவிர்த்தல் நல்லது. முன்பே தயாரித்து, குளிர்சாதன பெட்டிகளில் வைத்திருந்து பின்னர் எடுத்துச் சாப்பிடுவது போன்ற பழக்கங்களை அறவே தவிர்க்க வேண்டும்.

பொருத்தமான, தொடர்ச்சியான உடற் பயிற்சியை செய்துவர வேண்டியது அவசியம். பிராணயாமம் என்று சொல்லப்படுகின்ற மூச்சுப்பயிற்சி, ரத்த அழுத்த நோயை முழுமையாக கட்டுப்படுத்தும் சிறப்பு வாய்ந்தது. இந்த எளிய பயிற்சியைச் செய்து வந்தாலே ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்கள் நம்மை அணுகாது.

மது, புகையிலை, கோகெய்ன் போன்ற புகையிலைப் பொருட்களை அறவே ஒதுக்க வேண்டும். ரத்த அழுத்த நோய்க்கான முழு முதல் காரணிகள் மது உள்ளிட்ட போதைப் பொருட்கள்தான். எனவே போதைப் பழக்கத்தை வைத்துக்கொண்டு, ரத்த அழுத்த நோயை நிச்சயமாக குணப்படுத்த முடியாது.

பெண்களைப் பொறுத்தவரையில் கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் உணவில் அதிகம் இருக்கும் வகையில் பார்த்துக்கொண்டாலே ரத்த அழுத்த நோயைத் தவிர்க்க முடியும் என்று பெல்ஜியத்தில் நடைபெற்ற ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களை இரண்டு பிரிவாகப் பிரித்து, ஒரு பிரிவினர் மக்னீசியம், மற்றும் கால்சியம் சத்துள்ள உணவுகளையும், மற்ற பிரிவினர் அது இல்லாத உணவினையும் இரண்டு வாரங்கள் உண்ணவைக்கப்பட்டுள்ளனர். இரண்டு வாரங்கள் கழித்து பரிசோதனை செய்து பார்க்கும்போது கால்சியம், மக்னீசியம் சத்துள்ள உணவை உட்கொண்ட பெண்களின் ரத்தழுத்த அளவு மிகவும் சீராக இருந்தது கண்டறியப் பட்டுள்ளது.

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் மற்றவற்றை விட ஆலிவ் எண்ணெயே சிறந்தது என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கூடுதலாக மீன் எண்ணெயையும் சமையலில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் ரத்த அழுத்த நோய் தொடர்பான ஆய்வுகள் கூறுகின்றன. இவை இரண்டும் அறவே கொழுப்புச் சத்து இல்லாதவை என்பதே இதற்குக் காரணம்.

சி வைட்டமின் சத்துள்ள பொருட்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்தலாம். ஏ மற்றும் ஈ வைட்டமின்களுக்கு ரத்த அழுத்தத்தைக் கட்டுப் படுத்தும் குணம் இல்லை.

ரத்த அழுத்த நோய்க்கு மருத்துவ சிகிச்சைகளை விட, மனதை இலகுவாக்க உதவும் தியானப் பயிற்சியே சிறந்த மருந்து என்பதை சர்வதேச மருத்துவ ஆய்வுகள் உறுதியாகக் கூறுகின்றன.

ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்த அல்லது குணப்படுத்த மருந்துகளைவிட அன்றாட வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்துகொள்வதும் உணவுக் கட்டுப்பாடும், உடல் மன பயிற்சியும் அவசியம் என்பதை, மேலே உள்ள பரிந்துரைகள் நமக்கு உணர்த்துகின்றன.

நம் உடல் நலத்துக்கு ஏற்ப இயற்கை மருத்துவ குறிப்புகள்

நம் உடல் நலத்துக்கு ஏற்ப இயற்கை மருத்துவ குறிப்புகள்:-


* உடலில் எந்த உறுப்பில் சுளுக்கு ஏற்பட்டாலும் உடனே நிவாரணம் பெற, சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் வெந்நீர் ஒத்தடம் கொடுத்து, தேக்கரண்டியளவு தேங்காய் எண்ணெயைக் காய வைத்து, அதில் சிறிது மிளகுத்தூளையும், கற்பூரத்தையும் போட்டுக் கலக்கி, சுளுக்குள்ள இடத்தில் பூசினால் சுளுக்கு போய்விடும்.

* வயிற்றில் சங்கடமா? அரை தம்ளர் மோரில் சிறிது தண்ணீர் விட்டு துளி உப்பும் கொஞ்சம் பெருங்காயப்பொடியும், அரை தேக்கரண்டி சர்க்கரையும் போட்டுக் கலக்கிக் குடித்தால் போதும். அடுத்த அரை மணியில் முகம் பிரசன்ன வதனமாகிவிடும்.

* பெண்களுக்கு 40 வயதில் மாதவிடாய் பிரச்னை இருப்பது சகஜம். ராகியை மாவாக அரைத்து வைத்துக்கொண்டு காலையில் கஞ்சி வைத்து மோர், உப்பு சேர்த்து அல்லது பால் சர்க்கரை விட்டுக் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். உதிரப்போக்கு கட்டுப்படும்.

* 40 வயதுப் பெண்களுக்கு லேசான தலை சுற்றல் வரும். இதைத் தடுக்க சந்தனம், கொத்துமல்லி விதை, நெல்லி வற்றல் மூன்றையும் சம அளவில் சேர்த்து இரவில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு அவுன்ஸ் குடித்தால் தலை சுற்றல் நிற்கும்.

* மாதவிலக்கின்போது ஏற்படும் வலியைக் குறைக்க கட்டிப் பெருங்காயத்தை நீரில் கெட்டியாகக் கரைத்து மடக் மடக் என்று குடித்துவிட வேண்டும்.

* வயிற்றுப் புண்ணினால் வரும் வயிற்று வலியாக இருந்தால் மிதமான சூடான வெந்நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக குடித்தால் உடனே வலி குறையும்.

* அதிகமான மது குடித்ததினால் உண்டான தலைவலி அல்லது அஜீரணத்தால் உண்டான தலைவலி எல்லாம் வெந்நீர் சாப்பிடுவதால் குணமடையும்.

* இஞ்சியைப் பல் வலிக்கும் இடத்தில் வைத்துக்கொண்டு இஞ்சிச்சாறு அதில் வரும்படி பல்லினால் அழுத்தமாக கடித்துக் கொண்டால் பல்வலி நிமிஷத்தில் மறைந்துவிடும்.

* "கேஸ்டிக் அல்சர்' தொந்தரவு உள்ளவர்கள் வயிறு சம்பந்தமான எந்தக் கஷ்டமாக இருந்தாலும் அதற்குத் தினம் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது வேப்பிலைக் கொழுந்தை சாப்பிட வேண்டும்.

* வாய்ப் புண்ணிற்கு பச்சரிசி, பயத்தம் பருப்பு, ஒரு தேக்கரண்டி வெந்தயம், நிறைய பூண்டு உரித்துப் போட்டு குக்கரில் வைத்து வெந்தவுடன் கெட்டியான தேங்காய்ப்பால் கலந்து சாப்பிட வேண்டும்.

* பேதியோ, வயிற்றுப்போக்கோ ஏற்பட்டால் வெந்தயத்தை நன்றாக கறுப்பாக வறுத்து, நைஸôக பொடி செய்து ஒரு தேக்கரண்டி பொடியில் சிறிது தேன் விட்டுக் கலந்து உட்கொள்ள சரியாகிவிடும்.

* திராட்சைப்பழமும், உலர்ந்த திராட்சையும் ஜீரண சக்தியை வலுப்படுத்தி குடல்புண், சிறுநீரகம் முதலியவற்றைச் சுத்தப்படுத்துகிறது.

* மலச்சிக்கல் உடையவர்கள் இரவில் பச்சை வாழைப்பழம் சாப்பிடுவது உகந்தது

கோடைக்காலத்திற்கு ஏற்ற உணவுகள்

கோடைக்காலத்திற்கு ஏற்ற உணவுகள்:-


கோடைக் காலத்திற்கு என்று தனியாக ஏதேனும் உணவுகள் இருக்கிறதா என்று யோசிக்க வேண்டாம். கோடைக் காலத்தில் நமது உடல் இழக்கும் நீர்த்தன்மையை அதிகரிக்கவும், உடல் சூட்டைக் குறைக்கவும், நமது உணவு முறையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

அதாவது நீர்ச்சத்துள்ள காய்கறிகளை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ள வேணடும்.

அதிக காரம், மசாலா நிறைந்த உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

உணவில் மோர் சேர்த்துக் கொள்வது உடலுக்கு நல்ல பலனை அளிக்கும்.

ஊறுகாய், உப்புத் தன்மை கொண்ட மோர் மிளகாய் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டாம்.

அதிகமாக நீர் பருகுங்கள். காபி, டீ ஆகியவற்றை திரவ ஆகார பட்டியலில் சேர்க்க வேண்டாம்.

நீர் மோர், எலுமிச்சை சாறு, பழச்சாறுகளை உணவிற்கு இடையே சேர்த்துக் கொள்வது நன்மையளிக்கும்.

இரவு வடித்த சாதத்தில் நீரை ஊற்றி அதனை காலையில் சிறிது உப்பு சேர்த்து அருந்துவது வயிற்றுக்கு குளிர்ச்சியைத் தரும்.

வெயிலில் அலைபவர்கள் மட்டும் குளுக்கோஸ் கலந்த நீரை பருகலாம்.

குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் சீரகத் தண்ணீர் கொடுக்கலாம்.

புளி, காரம், உப்பைக் குறைத்து எளிமையான அதே சமயம் சத்தான உணவை தினமும் உண்ணுங்கள்.

கீரை, கிழங்கு ஆகியவற்றை அதிகமாக சாப்பிடலாம். வெள்ளரி, தர்பூசணி, மெலாம் பழங்களை சாறு எடுத்து பருகாமல், பழங்களாக சாப்பிடுவதால் அதில் உள்ள நார்ச்சத்தும் உடலுக்குக் கிடைக்கும். தேவையற்ற சர்க்கரையும் குறையும்.

சின்னம்மை பற்றிய தகவல்கள்

சின்னம்மை பற்றிய தகவல்கள்:-


சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. 100 டிகிரிக்கும்மேல் காய்ச்சல் இருக்கும். கண்களில் இருந்து தண்ணீர் கொட்டும். வயிறு, நெஞ்சுப் பகுதிகள் சிவப்பாகி, கை, கால் என்று உடலின் பிற பகுதிகளிலும் சிறு சிறு நீர்க் கட்டிகள் உருவாகும். கடும் அரிப்பை உருவாக்கும்.
அரிப்பு ஏற்பட்டு சிவக்கிற சமயத்தில்தான் இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவும். அதனால் சிவக்கும் சமயத்தில் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும். சுமார் ஒரு வாரம் வரை இந்த நீர்க் கட்டிகள் இருக்கும். பின்பு, அவை தானாகவே காய்ந்து உதிர்ந்துவிடும். நல்ல ஊட்டச் சத்து மிக்க காரம் இல்லாத உணவுகளை உட்கொள்ள வேண்டும். நீர்ச் சத்து மிக்க உணவு, இளநீர், பழச்சாறு அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிசேரியன் பிரசவத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்

சிசேரியன் பிரசவத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!



தற்போது சுகப்பிரசவம் என்பது குறைந்துவிட்டது. பெரும்பாலான பெண்களுக்கு சிசேரியன் பிரசவம் தான் நடைபெறுகிறது. பொதுவாக இந்த மாதிரியான பிரசவம், குழந்தை பிறக்கும் போது சிக்கல் ஏற்பட்டால், தான் நடைபெறும். மேலும் சில அனுபவமுள்ள பெண்களும் சிசேரியன் பிரசவத்தையே சிறந்ததாக சொல்கின்றனர். ஏனெனில் சுகப்பிரசவத்தின் போது எற்படும் வலியை தாங்கிக் கொள்ள முடியாது என்பதாலேயே தான். ஆனால் உண்மையில் சிசேரியன் பிரசவத்தின் போது அவ்வளவாக வலி தெரியாவிட்டாலும், அந்த மாதிரியான பிரசவத்திற்குப் பின் வாழ்நாள் முழுவதும் ஏற்படும் பக்கவிளைவுகளைப் பற்றி யாரும் யோசிக்கவில்லை. ஆம், சிசேரியன் பிரசவத்தை தேர்ந்தெடுத்தால், அதற்கு பின் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அந்த பிரச்சனைகள் என்னவென்று தெரிந்து கொள்ள, கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

* முதலில் சிசேரியன் பிரசவம் என்றாலேயே வயிற்றை கிழித்து, ஆப்ரேஷன் செய்து குழந்தையை வெளியே எடுப்பது தான். அவ்வாறு ஆப்ரேஷன் செய்வதால், வயிற்றில் தழும்பானது வாழ்நாள் முழுவதும் அப்படியே இருக்கும். பின் என்ன தான் செய்தாலும் போகாது. அதுமட்டுமின்றி அவ்வாறு அடிவயிற்றில் ஆப்ரேஷன் செய்யும் போது, பிற்காலத்தில் வேறு ஏதாவது ஆப்ரேஷன் வயிற்றில் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

* சுகப்பிரவத்தை விட சிசேரியன் செய்து குழந்தை பெற்றவர்களுக்கு குறைந்தது 3 மாத ஓய்வானது அவசியம். வேலை செல்லும் பெண்களுக்கு இது மிகவும் பிரச்சனையாகிவிடும். ஏனெனில் அலுவலகத்தில் மகப்பேறு விடுப்பு மூன்று மாதம் என்பதால், அதற்கு மேல் விடுப்பு எடுத்தால், சம்பளத்தில் பிடித்துக் கொள்வார்கள் என்பதை விட, குழந்தையுடன் அதிகமான நேரத்தை செலவழிக்க முடியாது.

* பொதுவாகவே தசையில் ஏதேனும் கடுமையான வெட்டுக்கள் ஏற்பட்டால், அந்த இடத்தில் குடலிறக்கம் என்னும் ஒருவித புடைப்பானது உண்டாகும். குறிப்பாக சிசேரியன் பிரசவத்திற்கு பின் இந்த மாதிரியான குடலிறக்கம் ஏற்படும். அதிலும் சிசேரியன் பிரசவத்திற்கு பின் சரியான ஓய்வு எடுக்காவிட்டால், இறுதியில் குடலிறக்கத்திற்கு உள்ளாகக்கூடும்.

* ஒரு முறை சிசேரியன் பிரசவம் மேற்கொண்டால், அடுத்த முறை சுகப்பிரசவம் ஏற்படாது என்பதில்லை. ஆனால் பெரும்பாலானோருக்கு முதல் முறை சிசேரியனுக்குப் பிறகு சுகப்பிரசவம் இருந்ததில்லை. மேலும் மருத்துவர்கள் இரண்டாம் முறையும் சிசேரியன் என்றால், இதற்கு மேல் குழந்தை வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள். ஏனெனில் ஒருவருக்கு இரண்டு முறைக்கு மேல் சிசேரியன் செய்தால், பின் அதிகப்படியான பிதற்றல் ஏற்படும்.

* சிசேரியன் செய்த பின்னர் அடிக்கடி கடுமையான முதுகு வலியானது ஏற்படும். அதிலும் சிசேரியன் போது தையல்கள் போட்டிருப்பதால், ஒவ்வொரு முறை சிரிக்கும் போதும், இருமலின் போதும், தையல் போட்ட இடத்தில் ஒருவித அழுத்தம் மற்றும் வலியை உணர நேரிடும். இதனாலும் முதுகு வலி ஏற்படும்.

உடல் பருமன் எவ்வாறு உண்டாகிறது?

உடல் பருமன் எவ்வாறு உண்டாகிறது?

* அதிக உழைப்பின்மை, உடற்பயிற்சியின்மை.

* இன்று மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின், கார், மோட்டார் பைக் போன்ற உபகரணங்களால் உடல் உழைப்பு என்பது அறவே இல்லாமல் போய்விட்டது. அடுத்தத் தெருவுக்கு செல்வதென்றால் கூட வாகனம் பயன்படுத்தும் நிலையில் நம் மக்கள் உள்ளனர்.

* உடலில் தைராய்டு சுரப்பி குறைவாக சுரந்தால் உடல் பருமன் அதிகரிக்கிறது.

* அளவுக்கு அதிகமாக கொழுப்புப் பொருட்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதும், மேலும் எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்பதும் தான் உடல் எடைக்கு முக்கியக் காரணம்.

* சிலருக்கு பரம்பரையாக உடல் பருமன் நோயின் தாக்கம் வந்துக் கொண்டிருக்கும்.

* நவீன உணவுப் பழக்கங்கள், மருந்து, மாத்திரைகள் அதிகம் உபயோகிப்பதாலும் உடல் எடை அதிகரிக்கிறது.

* ஒருவரின் உடல் எடை அதிகரிக்கிறது என்பதை அறிய சில அறிகுறிகள் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

* அடிக்கடி உடல் சோர்வு, களைப்பு உண்டாகும்.

* உடம்பில் அதிக வியர்வை காணுதல்.

* நடப்பதில், மாடிப்படி ஏறி இறங்குதல், சில வேலைகள் செய்யும் போது உடல் வலி ஏற்படுதல்.

* அடிக்கடி மயக்கம், படபடப்பு, மூச்சிரைப்புக் காணுதல் போன்றவை இருந்தால் உடல் எடை தானாக அதிகரிக்கிறது என்பதை அறியலாம்.

உடல் பருமனால் ஏற்படும் நோய்கள்:

* இரத்த அழுத்த நோய்

* இருதய படபடப்பு

* கல்லீரல் பாதிப்பு

* பித்தக் குறையாடு

* நீரிழிவு நோய்

* மூட்டு வலி

* சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும்.

* பெண்களுக்கு மாதவிலக்குப் பிரச்சினைகள், மார்பகப் புற்றுநோய், மற்றும் இடுப்பு, கை, கால், மூட்டுவலி உண்டாகும்.

* மனச்சிதைவு ஏற்படுவதாலும் சிலரின் உடல் எடை அதிகரிப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

உடல் பருமனை குறைக்க சில டிப்ஸ்:

* உடல் எடையை உடனே குறைக்க முடியாது. உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம்தான் படிப்டியாகக் குறைக்க முடியும்.

* அலுவலகத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள், தினமும் காலை அல்லது மாலை நேரத்தில் நடைபயிற்சி செய்வது நல்லது.

* பெண்கள் வீட்டு வேலைகளை செய்து வந்தால் உடல் பருமன் குறையும்.

* எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். நொறுக்குத் தீனி, இனிப்பு வகைகள் தவிர்ப்பது நல்லது.

* மாவுச் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்.

* பச்சை காய்கறிகளை சாலட் செய்து சாப்பிட வேண்டும்.

* மது பானங்கள் சாப்பிடக் கூடாது.

* குளிரூட்டப்பட்ட பானங்களைத் தவிர்ப்பது நல்லது.

* பதப்படுத்தப்பட்ட பதனிடப்பட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது.

* மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* சத்து மாத்திரைகளைத் தவிர்த்து உணவின் மூலம் அந்த சத்துக்கள் கிடைக்கச் செய்யுமாறு சாப்பிட வேண்டும்.

* வாரம் ஒருமுறை ஒருவேளை உண்ணா நோன்பு இருப்பது நல்லது.

* யோகா பயிற்சி சிறந்த பலனைத் தரும்.

* உணவில் அதிகளவு கீரை வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.


உடல் பருமன் குறைய மருத்துவம்:

சில மூலிகைகள் உடலில் உள்ள கொழுப்புப் பொருட்களை கலோரியாக மாற்றி உடல் பருமனைக் குறைக்கும். அதில் அருகம்புல் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. அருகம்புல் இரத்தத்தை சுத்தம் செய்வதில் மிகவும் சிறந்த மூலிகை.

அருகம்புல்லை நன்கு நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது,

உலர்ந்த அருகம்புல் - 1\2 கிலோ

கொத்தமல்லி விதை - 1\4 கிலோ

சீரகம் - 25 கிராம்

இவற்றை எடுத்து நன்றாக இடித்து பொடியாக்கி சலித்து வைத்துக் கொண்டு தினமும் அரை லிட்டர் தண்ணீ­ரில் 5 கிராம் வீதம் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து பாதியாக சுண்டக் காய்ச்சி காலை மாலை சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

அரைக்கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு,, பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து வாரத்திற்கு நான்கு முறை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

ஆற்றுத்தும்மட்டி(கொம்மட்டி) கொடியின் மருத்துவ குணங்கள்

ஆற்றுத்தும்மட்டி(கொம்மட்டி) கொடியின் மருத்துவ குணங்கள் :-

ஆப்பிரிக்கா, இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. தமிழகமெங்கும் மணற்பாங்கான இடங்களில் வளர்கிறது. மிகவும் வெட்டப்பட்ட இலைகளையுடைய தரையோடு வேர்விட்டுப் படரும் கொடி. பச்சை, வெள்ளை நீள வரிகளையுடைய காய்களையுடையது. காய்கள் சிறிய பந்து போல் இருக்கும். ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை வண்ணத்திலும் இருக்கும். இதில் அமிலத் தன்மை அதிகம் ...இருக்கும். விதைகள் மூலம்இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இதற்கு கொம்மட்டி, வரித்தும்மம் மற்றும் பேய்கும்மட்டி என்ற வேறுப் பெயர்களும் உண்டு.

மருத்துவக் குணங்கள்:

ஆற்றுத்தும்மட்டியின் சமூலம் நுண்புழு கொல்லும். நஞ்சு முறிக்கும்.
காய் சிறு நீர், மலம் பெருக்கும்.

புழுவெட்டினால் முடி கொட்டும் இடங்களில் காயை நறுக்கித் தேய்த்து வரப் புழு வெட்டு நீங்கும். முடி வளரும்.

பெருந்தும்மட்டி, சிறு தும்மட்டி, பேய்சுரை, பேய்புடல், பேய் பீர்க்கு ஆகியவற்றை சமூலமாக உலர்த்திப் பொடித்து சமனளவு கலந்து அரைத் தேக்கரண்டி காலை மாலை வெந்நீரில் கொள்ள அனைத்து நஞ்சுகளும் முறியும்.

தும்மட்டிக்காய் சாற்றில் கருஞ்சிரகத்தை அரைத்து விலாவில் பூசினால் குடல் பூச்சிகள் வெளியேறி விடும்.

பேய்குமட்டிக்காய்சாறு, பால், தனித்தேங்காய்பால் வகைக்கு 1 லிட்டர், விளக்கெண்ணைய், வெங்காயச்சாறு வகைக்கு 3 லிட்டர் கலந்து அவற்றுடன் கடுகு, வெள்ளைப் பூண்டு, பஞ்சல வணம், கடுக்காய், கடுகுரோகனி, அதிமதுரம், திரிகடுகு, ஓமம், வாய்விளங்கம், சீரகம், சிற்றரத்தை, கோஸ்டம், சிறுநாகப்பூ, சின்னலவங்கப்பட்டை வகைக்கு 2 கிராம் அரைத்துப் போட்டுப் பதமுறக் காய்ச்சி வடித்துக் (ஆற்றுத் தும்மட்டி எண்ணெய்) காலையில் மட்டும் 2,3 தேக்கரண்டி( 4 முறை பேதியாகுமாறு) 4,5 நாள்கள் சாப்பிட்டு வர வாதநீர், கிருமிகள், ஈரல்களின் வீக்கம், நீர்கோவை, பெருவயிறு, இடுப்புவலி, வாயு முதலியவை தீரும்

தொப்பையை குறைக்க வழி

தொப்பையை குறைக்க வழி;

* உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

* பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.

* எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

* காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.

* இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

* உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

* தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

* எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்கிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.

இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.

மல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்

மல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்..!

மல்லிகைப் பூ என்றாலே தலையில் சூடிக் கொள்ளவும், வாசனை திரவியங்கள் தயாரிக்கவும் பயன்படும் என்று மட்டுமே நினைத்திருந்தால் இந்த கட்டுரையை படித்து முடித்த பிறகு உங்கள் கருத்தை நீங்களே மாற்றிக் கொள்வீர்கள்.

மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதில் ஒரு சில அடிப்படை விஷயங்களை உங்களுக்குக் கூறுகிறோம்...

வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.

இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.

இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது

பாத வெடிப்பு- பாட்டி வைத்தியம்

பாத வெடிப்பு- பாட்டி வைத்தியம்:-

பலருக்கு முகத்தில் பருக்கள் தோன்றுவதை போல் பாதங்களில் வெடிப்பு ஏற்படுகிறது. ஆரம்பத்திலேயே பாதங்களை பராமரிப்பதில் ஆர்வம் காட்டினால் நிரந்தரமாக வெடிப்பு வருவதை தடுக்க முடியும்.
பாதங்களை பராமரிக்க சில எளிய டிப்ஸ்

மருதாணியை நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும் பின்பு தண்ணீரால் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும். பாதம் தாங்கும் அளவிற்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பும் எலும்பிச்சை சாறும் சேர்த்து அதில் பாதத்தை வைத்திருந்து பின்பு சொரசொரப்பான பொருட்களால் தேய்த்து வந்தால் கெட்ட செல்கள் உதிரும். 

வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்து அரைத்து, விளக்கெண்ணெய் சேர்த்து வெடிப்பு ஏற்பட்ட பகுதிகளில் தேய்த்து வந்தால் பித்த வெடிப்பு குணமடையும். பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதனை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் நன்கு தேய்த்து வர வெடிப்பு குணமாவதுடன் எரிச்சல் குறையும். தரமான காலணிகளை பயன்படுத்துவதன் மூலம் வெடிப்புகளை தவிர்க்கலாம்.

விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவில் எடுத்துக்கொண்டு அதில் மஞ்சளை சேர்த்து பாதத்திற்கு தடவி வந்தால் வெடிப்பு ஏற்படாது.
இரவு நேரங்களில் படுக்க செல்லும் முன்பு காலை சுத்தப்படுத்தி சிறிது தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் வெடிப்பு வருவதை தவிர்க்கலாம். தினமும் குளித்ததும் பாதத்தை துணியால் துடைத்து பின் விளக்கெண்ணெய் தேய்த்து வந்தாலும் வெடிப்பை தவிர்க்கலாம்

மனச்சோர்வை சமாளிக்க சில ஈஸியான வழிகள்

மனச்சோர்வை சமாளிக்க சில ஈஸியான வழிகள்!!!

எப்படிப்பட்ட வலிமையான மனிதரையும், மனச்சோர்வு எளிதில் வீழ்த்திவிடும். ஆனந்தமும் வேதனையும் கலந்தது தான் வாழ்க்கை. ஆனாலும் மனச்சோர்வுடன் இருக்கும் போது நம் வாழ்க்கையில் நிகழ்ந்த சோகமான காரியங்கள் மட்டுமே நினைவுக்கு வரும். நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாளர்கள், அண்டைவீட்டார், கடவுள் நம்பிக்கை இருக்கிறவர்களுக்கு கடவுள் என நம்முடைய சோகங்களையும், மகிழ்ச்சிகளையும் பகிர்ந்து கொள்ளும் பலர், நம் உலகத்தில் இருக்கிறார்கள். மனச்சோர்விலேயே உழன்று கிடப்பதால் சாதிக்கப் போவது ஒன்றும் இல்லை. அதிலிருந்து வெளியே வந்தால், நம்மை போல மனச்சோர்வில் அகப்பட்டவர்களுக்கும் உதவலாம். இதனால் நம்மை போன்ற பிற மனிதர்களுடைய வாழ்க்கையும் இனிமையாக இருக்க வகை செய்யலாம். இத்தகைய மனச்சோர்வில் இருந்து வெளிவருவது எப்படி என்பது குறித்த சில முக்கியமான குறிப்புகளை இங்கே கொடுத்து இருக்கிறோம். நீங்களோ அல்லது உங்களுக்கு அறிமுகமானவர்களோ மனச்சோர்வில் இருந்தால், இவற்றை படிக்குமாறு கூறி, வாழ்வை இனிமையாக்குங்கள்.

உடற்பயிற்சி செய்வது 
மன அழுத்தத்தை நீக்க சிறந்த வழி உடற்பயிற்சி. இது நல்ல உடல் அமைப்பை கொடுப்பது மட்டுமின்றி, நேரிடையான சிந்தனைகளையும் அதிகரிக்கின்றது. உணர்வுகளை சீர்படுத்துகின்ற செரோடொனின் மற்றும் டெஸ்டோஸ்டெரோன் ஆகியவற்றை சுரக்க உடற்பயிற்சி உதவுகின்றது. அதோடு மனச்சோர்வு அளிக்கும் சிந்தனைகளையும் ஒதுக்கிவிடுகின்றது.

உதவி கேட்பது 
வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளை கையாள உதவி கேட்பதில் எந்த அவமானமும் இல்லை. வாழ்க்கையின் சுமைகளை தனியாக சுமக்க வேண்டும் என்று யாரும் எதிர்பாப்பது இல்லை. ஆகவே தாய், தந்தை, துணைவர், உடன் பணியாளர் அல்லது நண்பர் இடம் இருந்து உதவி கேட்பது உணர்வுச் சுமையை ஓரளவு குறைக்கும்.

சமச்சீர் உணவு 
பழங்கள், காய்கரிகள், மாமிசம், தானியங்கள் மற்றும் கார்போ ஹைட்ரேடுகள் ஆகிய ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுதல், சிந்தனை சிதறாமல் இருக்க உதவுகின்றன. சமச்சீர் உணவு உடல்நலனையும், மனநலனையும் சீர்படுத்துகின்றது.

சுய விழிப்புணர்வு 
வாழ்க்கையின் நிகழ்வுகளை சரியாக புரிந்து கொள்ள முடியாமல், தங்களை அளவுக்கு மீறி அழுத்துவதால் மக்கள் பொதுவாக மனச்சோர்வு அடைகிறோம். எனவே சரியாக தம்மை புரிந்து கொண்டு, அதை சந்தோஷமாக விரும்பி செய்தால், மனச்சோர்வானது நீங்கும்.

எடை குறைத்தல் 
மனச்சோர்வுக்கு அதிகமான எடை பிரச்சனையாக இருந்தால், எடையை குறைக்க முயல்வது ஒரு நல்ல தீர்வைத் தரும். மேலும், உடல் வலிமை ஆரோக்கியத்தையும், சுய கருத்துக்கும் நேர்மறையான சிந்தனையை கூட்டுகின்றது.

நண்பர்கள் 
நல்ல நண்பர்கள் தேவையான ஆறுதலையும், வாழ்க்கையின் சோர்வூட்டும் சூழ்நிலையில் இருந்து வெளியே வருவதற்கான ஆலோசனைகளையும் வழங்குவார்கள். மேலும், தேவையுள்ள நேரத்தில், சொல்வதை காதுகொடுத்து கேட்கும் நண்பர் இருந்தால், மனதில் இருக்கும் சந்தேகங்களும், எதிர்மறையான சிந்தனைகளும் முற்றிலும் களைந்துவிடும்,.

டைரி எழுதுவது 
தினசரி உணர்வுகளை எழுத்து மூலமாக பதிவு செய்வது சுய பரிசோதனை செய்வதற்கும், ஆராய்வதற்கு ஒரு சிறந்த வழி ஆகும். இவ்வாறு வாழ்க்கையை குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்பதை அனுதினமும் பதிவு செய்தால், மனச்சோர்வில் இருந்து விடுபட ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.

எதிர்மறையான மக்களிடம் இருந்து விலகி இருப்பது 

தொடர்ச்சியாக பிறரை குறைத்து பேசுகிறவர்களோடு இருக்க யாருமே விரும்ப மாட்டார்கள். அப்படிப்பட்ட மக்களிடம் இருந்து விலகி இருப்பது மன அமைதியையும், சமாதானத்தையும் கொடுக்கும்.

வேலையை விட்டு விடுதல் 
பிரச்சனைகளின் வேர் வேலையில் இருந்தால், அதை விட்டுவிடுவது மன அமைதியை கொடுக்கும். தனிப்பட்ட மகிழ்ச்சியையும் திருப்தியையும் விட்டுக் கொடுக்காமல், குறிக்கோளை நிர்ணயம் செய்ய வேண்டும். அதற்கு வேலை ஒரு தடையாக இருந்தால், அதை விட்டு விடுங்கள்.

தனிமையாக இருப்பதை தவிர்ப்பது 
மனச்சோர்வோடு இருக்கும் போது, தனிமையில் இருந்தால், மனம் மேலும் சோர்வுடன் தான் இருக்குமே தவிர, அமைதியடையாது. அதற்காக எப்போதுமே கூட்டமாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அவ்வாறு நண்பர்களுடன் சேர்ந்து இருந்தால், அவை முழுமையான தீர்வை கொடுக்காவிட்டாலும், மனச்சோர்வு தரும் சிந்தனைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும்.

சுற்றுலா செல்லுதல் 
எதிர்மறையான சிந்தனைகளை அகற்றுவதற்கு, காட்சி அமைப்பை மாற்றுவது எப்போதுமே உதவியாக இருக்கும். வாழ்க்கையில் நேர்மறையான சிந்தனைகளை கொண்டு வர ஒருநாள் பிரயாணம் மேற்கொள்வதற்கு ஈடாக எதுவுமே இல்லை. எனவே மனச்சோர்வின் போது எங்கேனும் வெளியே சென்றால், எளிதில் மனச்சோர்வானது நீங்கும்

நேர்மறையான எண்ணங்கள் 
வாழ்க்கையில் நேர்மறையாக இருப்பதே மனச்சோர்வு கொடுக்கும் சிந்தனைகளை தவிர்ப்பதற்கான சிறந்த வழி. மனதிலே எதிர்மறை உணர்வுகள் இருக்கின்றன. சிந்தனைகளை நேர்மறையான திசையில் செலுத்துவதன் மூலமாக, மனச்சோர்வின் தாக்கங்களை அகற்றிவிடலாம்.

மனநல வல்லுநரிடம் பேசுவது 
மனச்சோர்வில் இருந்து வெளிவருவதற்கு மிகவும் எளிதான மற்றும் ஆற்றல் வாய்ந்த வழி மனநல வல்லுநரிடம் பேசுவது தான். இதனால் மனச்சோர்வின் வேரை கண்டுபிடித்து அகற்ற முடியும்.

செல்லப்பிராணியை வளர்ப்பது 
செல்லப்பிராணிகள் தங்கள் எஜமான்களிடம் அற்புதமான வழியில் தொடர்பு கொள்கின்றன. தனியாக வாழ்கிறவர்களை காட்டிலும், செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் மனச்சோர்வின் தாக்கங்களில் இருந்து பிழைத்துக் கொள்கிறார்கள் என்று பல ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன. ஆகவே செல்லப்பிராணியுடன் உணர்வுபூர்வமாக தொடர்புகொள்வது, எதிர்ம்றையான உணர்வில் இருந்து வெளிவர உதவும்.

நிகழ்காலத்தில் வாழ வேண்டும் 
இறந்தகால தவறுகளிலும், எதிர்காலத்தின் நிலையின்மையிலும் உழல்வதில் அர்த்தமே இல்லை. அது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்பதால், அச்சூழ்நிலையில் உங்கள் உணர்வுகளை செலுத்துவது பலன் அளிக்காது. 'எப்போது',‘எங்கே' மற்றும் ‘நாளை' என்பனவற்றுக்கு பதிலாக, 'இப்போது', ‘இங்கே',‘இன்று' என்பனவற்றில் கவனம் செலுத்துங்கள்.

நன்றாக தூங்குவது 
நேர்மறையான சிந்தனைக்கு திரும்ப ஒருவருக்கு தேவைப்படுவது எல்லாம் ஒரு நல்ல உறக்கமே. இரவு தோறும் 7-8 மணிநேரம் உறங்குவது குறைவான மனச்சோர்வுக்கான அறிகுறிகளை காட்டுவதாக ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன.

இசையை கேட்பது 
மனச்சோர்வில் இருக்கும் போது, உணர்வை எழுப்பும் இசையை கேட்பது சோர்வடைந்த மனதிற்கு ஊக்கம் அளிக்கும். உணர்வுகளை மாற்றவும், ஆன்மாவை உயர்த்தவும், உணர்ச்சியை அதிகரிக்கவும் உதவும் ஆற்றல் இசைக்கு இருக்கின்றது. எனினும், மிகவும் உணர்வுபூர்வமான பாடல்களை கேட்பதால், எதிர்மறையான விளைவு ஏற்படும் என்பதால், அவற்றை தடுக்க வேண்டும்.

நெருக்கமான உடலுறவை தவிர்க்க வேண்டாம் 
மனச்சோர்வின் போது உடலுறவு சோர்வு அளிப்பதாக உணர்வது எளித. ஆனால் உண்மையில் உடலுறவு மனச்சோர்வில் வெளியே வருவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்பது பலருக்கும் தெரியாது. ஹார்மோன் உட்புகுதல்கள் மனச்சோர்வை சீர்படுத்தி, மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் அளிக்கின்றன.

வைட்டமின் சேர்க்கைகள் 
ஊட்டச்சத்து குறைபாடுகளும் மனச்சோர்வு அளிக்கும் சிந்தனையை விளைவிக்கலாம். இதனால் வெளிப்படும் அறிகுறிகளை மருத்துவரிடம் ஆலோசித்து, சமன்பாட்டை சரிசெய்ய வைட்டமின் சேர்க்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.