Spatikamalai – ஸ்படிகமாலை
ஸ்படிகம் எப்படி உற்பத்தி ஆகிறது?
பலநூறு ஆண்டுகளாக பூமிக்கு அடியில் புதைந்து போன நீர், பாறைகளாக உருமாறி இருக்கும். அந்த நீர்ப்பாறைகளை வெட்டி எடுத்து அதற்குள் அழுக்குகள், தூசிகள், கம்பிகள் மற்றும் உடைசல்கள் இல்லாத தூய்மையான கற்களை தேர்ந்தெடுத்து அதனை பலவித அளவுகளில் பட்டை தீட்டி தயாரிக்கலாம். உருண்டையாக தயாரிக்கப்பட்ட ஸ்படிகத்தில் துவாரமிட்டு மாலையாக்கி அணியலாம். இதையே நாம் ஸ்படிக மாலை என்கிறோம். ஸ்படிக மாலை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. மிகவும் குளிர்ச்சியான பிரதேசங்களில் வசிப்பவர்களும், குளிர்ச்சியான உடல் நிலை கொண்டவர்களும் ஸ்படிகம் அணிவதைத் தவிர்க்கவேண்டும். மற்றவர்கள் யார் வேண்டுமானாலும் அணியலாம்.
ஸ்படிகப் பாறைகள் ஆறு மற்றும் ஏழு பட்டைகள் கொண்ட தூண்கள், குச்சிகள் போல பூமிக்கு அடியில் கொட்டிக் கிடப்பதுண்டு. இந்த ஸ்படிக குச்சி வகைகளை பாலிஷ் செய்து ரெய்க்கி, ஹீலிங் பயிற்சிக்கு பயன்படுத்துவதும் உண்டு.
ஸ்படிகமாலை கோர்க்கும்முறை
ஸ்படிகமணி மாலையுடன் வேறு எந்த மணிகளையும் சேர்த்து கோர்த்து அணியக்கூடாது. (ருத்ராட்சமாக இருந்தாலும் சேர்க்கக் கூடாது). தனித்தனியாக அணிந்து கொள்ளலாம். தரமற்ற ஸ்படிகமணியை மாலையாக கோர்க்கக் கூடாது. ஸ்படிகத்தை நேரடியாகவோ, வெள்ளி அல்லது தங்கத்துடன் கோர்தோ அணியலாம். வீட்டிற்கு ஒரு ஸ்படிகமாலை இருந்தாலே போதும். அதிக உஷ்ணம் உள்ள குழந்தைகள் ஸ்படிகத்தை அரைஞாணில் அணியலாம்.
ஸ்படிகமணி மாலை அணிவதால் என்ன பயன்?
மனிதர்களாகிய நாம் ஒருநாளில் விடும் மூச்சு எண்ணிக்கை சராசரியாக 21,600 மூச்சாகும். ஆனால், இன்றைய பரபரப்பு உலகில் முப்பதாயிரம் வரை விடுவதாக சொல்கிறார்கள். ஸ்படிக மணி ஒரு மணி நேரத்திற்கு 21,600 அதிர்வலைகளை வெளிப்படுத்துவதாக கண்டறிந்திருக்கின்றார்கள். அப்படியானால் நம் கழுத்தில் அணியும் 108 ஸ்படிகமணிகள் கொண்ட மாலை எவ்வளவு அதிர்வலைகளை நம்மைச் சுற்றிலும் பரவிடச் செய்யும் என்று எண்ணிப் பாருங்கள். ஒரு அரண்போல நம்மை பாதுகாக்கும். முழுமையான கவசமாக ஸ்படிக மணி விளங்குகிறது. இதனால், தெய்வ அருள், மன அமைதி, சாந்தம், நல்ல சிந்தனை, தெளிவான அறிவு , தீர்க்கமான முடிவு போன்ற அற்புதங்களை நம்முள் நிகழ்த்தும்.
ஸ்படிக மாலை அணிவதால் கிடைக்கும் அறிவியல் ரீதியான பலன்கள்
- ஸ்படிக மாலை உடல் சூட்டை சீரான சரியான அளவில் இருக்க வைக்கும்.
- நமது மனதை அலைபாயும் பீட்டா நிலையில் இருந்து. அமைதியான ஆல்பா நிலைக்கு அழைத்து செல்லும். ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு. ஸ்படிக மாலையை விட சிறந்த மருந்து எதுவும் இல்லை.
- உள்ளச் சூட்டை தணிக்கும் ஆற்றல் ஸ்படிகத்திற்க்கு உள்ளது.
ஸ்படிக மாலை அணிய விதிமுறைகள் ஏதாவது கடைப்பிடிக்க வேண்டுமா?
ஸ்படிகம். சிறுவர் முதல் பெரியவர் வரை. ஆண்கள், பெண்கள், நாஸ்திகர்கள் எல்லோரும் அணியலாம். இறைவனின் படைப்புகள் அனைவருக்கும் பொதுவானது, அதனால், நீர் பாறையில் இருந்து கிடைக்கும் ஸ்படிகமாலை எல்லோரும் அணிய உகந்தது. ஸ்படிக மாலையை நீங்கள் கழிவறை செல்லும் நேரம் தவிர. மற்ற அனைத்து நேரங்களிலும் கழுத்தில் போட்டு கொள்ளலாம். குளிக்கும் பொழுது, கழுத்தில் ஸ்படிக மலையோடு குளிப்பது நல்லது. ஸ்படிக மாலை அணிவோர்கள் அசைவம் சாப்பிடலாமா? என்ற சந்தேகம் எல்லோர் மனதிலும் எழும் சாப்பிடலாம், ஸ்படிகமாலையை தொடர்ந்து அணியும் போது உங்களுக்கு அசைவம் சாப்பிடும் ஆசையை நிறுத்த வைக்கும்.
ஸ்படிக மாலையின் தரத்தை எவ்வாறு கண்டறிவது?
ஸ்படிக மாலையில் மொத்தம் பத்து விதமான தரம் இருக்கிறது. ஸ்படிக மாலையில் நீங்க கை வெத்தவுடன் ஒரு வித குளிர்ச்சியை உணர்ந்தால். அது நல்ல உயர் தரமானது. உயர்ந்த வகை ஸ்படிகமணி மாலையை நீரில் போட்டால் ஸ்படிகம் கண்ணுக்கு தெரியாது, நீரோடு நீராக ஒன்றி இருக்கும். முதல் தரம், இரண்டாம் தரம், மூன்றாம் தரம் என பத்தாம் தரம் வரை ஸ்படிக மாலைகள் கிடைக்கின்றன. முதல் தர ஸ்படிகமணி மாலைதான் நல்ல பலனைத் தரும். பார்த்துக் கொண்டே இருக்கச் செய்யும் வசீகர தன்மை ஸ்படிகத்திற்கு உண்டு. முக்கியமாக துல்லியமற்ற, ஊடுருவும் தன்மையற்ற, வெள்ளையாக இருக்கும் ஸ்படிகமணி மாலைகள் எதற்கும் உபயோகமற்றதாகும்.
ஜெபம் செய்ய பயன்படுத்தலாம்
தெய்வ பக்தி உள்ளவர்கள். 108 மணிகள் உடைய ஸ்படிக மாலையை கையில் வைத்து உங்களுக்கு பிடித்த இறைவனின் பெயரை, கிடைக்கும் நேரத்திற்க்கு தகுந்தார் போல் ஜெபம் செய்யலாம். உங்கள் லட்சியம் மற்றும் ஆசை என்னவோ அதை நிறைவேற்ற விரும்பினால், அதிகாலையில் எழுந்து மொட்டை மாடி போன்ற திறந்த வெளியில், உங்கள் லட்சியம் மற்றும் ஆசை என்னவோ, அதையே திரும்ப, திரும்ப ஜெபம் போல் ஸ்படிக மாலையை வைத்து செல்லுங்கள். உங்களுடைய ஆசை நியாயமான ஆசையாக இருந்தால் நிறைவேறும், இதன்மூலம் உங்களுடைய நேர்மறை எண்ணம் (Positive Thoughts) அதிகரிக்கும்.
நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் நம் மனம் ஒருநிலைப்பட வேண்டும். அமைதியான அதிகாலை வேளை தான் மனதை ஒரு நிலை படுத்த சரியான நேரம். பிரும்ம முகூர்த்தம் எனப்படும் மூன்றிலிருந்து ஐந்து. இதை நீங்கள் முயற்சி செய்து பாருங்க.
அணிபவர்கள் கவனிக்கவேண்டிய விதிமுறைகள்
ஸ்படிகமாலையை வாங்கி உபயோகப்படுத்தும் முன் குறைந்தது 3 1/2 மணி நேரமாவது சுத்தமான நீரில் ஊறவிட வேண்டும் அதேபோல் ஸ்படிக மாலையை ஒருவர் அணிந்த பின் அடுத்தவர் மாற்றி அணியும் போது நீரில் 3 1/2 மணி நேரம் ஊறவிட வேண்டும். ஸ்படிகத்தைக் கண்டிப்பாக இரவில் அணியக்கூடாது. காரணம், ஸ்படிக மாலையை இரவில் கழற்றித் தரையில் வைக்க வேண்டும். அப்போது தான் பூமியின் ஈர்ப்பு சக்தியினால் மறுபடியும் ஈர்ப்புப் பெறும். தினமும் இதைச் செய்ய வேண்டும்.
காலையில் இருந்து இரவு வரை ஒருவர் ஸ்படிக மாலை அணியும் போது அவரது உடற்சூட்டை இந்த ஸ்படிகம் தன்வசம் இழுத்துக் கொள்ளும். காலையில் ஒருவர் ஸ்படிகத்தை அணியும் முன் அது குளிர்ச்சியாகவும் இரவில் அதை கழட்டும்போது உஷ்ணமாக இருக்கும். இதை அணிந்த தருணத்தில் உங்கள் மன, உடல் அழுத்தம் குறைவதை நீங்கள் உணரலாம். எத்தனை நாட்களுக்கு அணிந்தாலும் அதன் சக்தி குறையவே குறையாது.
ஆன்மிகத்தில் ஸ்படிகத்தின் முக்கியத்துவம்
ஆன்மிகத்தில் ஸ்படிகம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. ஸ்படிக விநாயகர், சிவலிங்கம் போன்றவற்றை நமது பூஜை அறையில் வைத்து பூஜிக்கும் போது அபரிதமான ஈர்ப்பு சக்தி ஏற்படும். வாரம் இருமுறையாவது அபிஷேகம் செய்வது நல்ல பலனைத் தரும். முக்தி லிங்கம்- கேதார்நாத், வரலிங்கம்-நீலகண்ட ஷேத்திரம் (நேபாள்), மோட்ச லிங்கம்-சிதம்பரம், போகலிங்கம்-சிருங்கேரி, யோகலிங்கமாக சந்திரமௌலீஸ்வரராக-காஞ்சியில் ஈசன் அருள்பாலிக்கிறார். இவையெல்லாமுமே ஸ்படிக லிங்கங்கள்தான். தினமும் விடியற்காலையில் இதற்கு பூஜைகள் செய்யப்படுகின்றன.
ஸ்படிகத்தில் மிகச் சக்தி வாய்ந்தது, மகா மேரு. இந்த மேரு ஸ்படிகத்தை வாங்கும்போது வெடிப்பு, உடைப்பு இல்லாமல் உள்ளதா என்று சுத்தமாகப் பார்த்த பின் வாங்க வேண்டும். மகா மேருவை வெள்ளி அல்லது தாமிரத் தட்டில் வைத்து பூஜை அறையில் வைக்க வேண்டும். அதற்கும் அபிஷேகம் மிகவும் முக்கியம். ஸ்படிகத்தை யானை வடிவில் வைக்கும்போது லஷ்மி கடாட்சம் வரும். இவ்வளவு அற்புதங்கள் அடங்கிய ஸ்படிகத்தை அனைவரும் உபயோகித்துப் பயன் அடைவீர்கள்:
இவ்வளவு அற்புத மான ஸ்படிகத்தை மற்றவர்களுக்குப் பரிசாகவும் கொடுக்கலாம்.
Tuesday – செவ்வாய்க்கிழமை
செவ்வாய்க்கிழமை செய்யக்கூடாதது
செவ்வாய்க்கிழமை முடி வெட்டவோ, ஷேவிங்கோ, நகம் வெட்டவோ செய்தல் வீட்டில் உள்ள பாட்டி அல்லது அம்மா, இந்நாளில் செய்வது நல்லதல்ல என்றும் சொல்வார்கள். ஆனால் நாம் அது வெறும் மூட நம்பிக்கை என்று என்று கூறி, அவர்களை மதிக்காமல் அந்த காரியங்களை செய்வோம். இருப்பினும், பழங்காலம் முதலாக பின்பற்றப்பட்டு வரும் இப்பழக்கத்திற்கு பின்னால் உள்ள காரணத்தை பார்ப்போம்.
செவ்வாய்க்கிழமை துர்க்கை மற்றும் லட்சுமி தினம்
இந்தியாவின் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை புனித நாளாகக் கருதப்படுகிறது. ஏனெனில் செவ்வாய்க்கிழமையானது துர்க்கை அம்மன் மற்றும் லட்சுமிக்கு உரிய நாளாக கருதப்படுகிறது.
செலவு மற்றும் வீட்டை சுத்தம் செய்தல் கூடாது
செல்வத்தை வாரி வழங்கும் லட்சுமிக்கு உரிய நாள் செவ்வாய்க்கிழமை, இந்நாளில் லட்சுமி நம்மை தேடி வருவாள் என்பதால், இந்நாளில் நம்மிடம் உள்ள பணத்தை மற்றவருக்கு கொடுத்தால், லட்சுமி கடாட்சம் நம்மை விட்டு சென்றுவிடும் என்ற நம்பிக்கையை மக்கள் கொண்டுள்ளனர். இதனால் பலரும் இந்நாளில் பண வரவை எதிர்பார்ப்பதோடு, பணத்தை செலவிடமாட்டார்கள்.
இந்நாளில் வீட்டை தண்ணீர் ஊற்றி கழுவிடவோ அல்லது வீட்டில் உள்ள பொருட்களை தூக்கி எறியவோ மாட்டார்கள். இப்படி செய்வதால், வீட்டில் குடி கொண்டுள்ள லட்சுமி நம் வீட்டை விட்டு சென்று விடுவாள் என்ற நம்பிக்கை தான் முக்கிய காரணம்.
உடல் சுத்தம் கூடாது
உடல் சுத்தம் என்றால் குளிக்கக்கூடாது என்று அர்த்தம் இல்லை, முடி வெட்டுதல், ஷேவிங் செய்தல். நகம் வெட்டுதல் போன்ற செயல்களைக் குறிக்கும்.
ஜோதிடத்தின் படி
ஜோதிட சாஸ்திரம் இச்செயல்களை ஒருவர் மேற்கொண்டால், அவரது வாழ்நாளில் 8 மாதங்கள் குறைவதாக சொல்கிறது. செவ்வாய்க்கிழமையில் செவ்வாய் பகவான் நம்மை ஆட்கொள்கிறாராம், மேலும் மனித உடலில், செவ்வாய் இரத்தத்தில் குடியிருக்கிறார். இரத்தத்தில் இருந்து தான் முடி வளர்கிறது. எனவே செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உள்ளாகக்கூடும்.
செவ்வாய் கிரகத்தின் எதிர்மறை விளைவுகள்
முடியின் நிறம் கருப்பு. நம் உடலின் முடியை சனி நிர்வகிக்கிறது. செவ்வாய் கிழமைகளில் செவ்வாய் நம்மை ஆளுகிறது, ஆனால் சனி பகவான் தான் செவ்வாயின் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. அதனால் செவ்வாய்க்கிழமைகளில் முடியை வெட்டினால், சனி கிரகத்தின் சக்தி குறைந்து, செவ்வாயின் எதிர்மறை விளைவுகளுக்கு உள்ளாகக்கூடும். எனவே தான் செவ்வாய் கிழமைகளில் மேற்கூறிய செயல்களை செய்ய வேண்டாம் என்று சொல்கிறார்கள்.
இதுப் பற்றி எந்த ஒரு ஆராய்ச்சியிலும் நிரூபிக்கப்படாவிட்டாலும், நம் முன்னோர்கள் அவர்களுக்கு கிடைத்த தகவலின் படி, இதை நம்பி பின்பற்றி வந்தார்கள். நாமும் அறிவியல் பூர்வமாக சிந்தித்து இரத்தம் சம்பந்தப்பட்ட நோய் ஏற்படாமல் இருக்க பின்பற்றலாம் .
வாழ்க வளமுடன்
Subscribe to:
Posts (Atom)