கண்ணா லட்டு தின்ன ஆசையா

"கண்ணா லட்டு தின்ன ஆசையா" படத்தோட கதை பாக்யராஜ் இயக்கிய இன்று போய் நாளை வா என்ற பழைய படத்தின் கதைதான் என்றாலும், திரைக்கதையை இன்றைய ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி மாற்றி வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் மணிகண்டன்.


படத்தோட கதை என்னனா ...

சந்தானம், பவர் ஸ்டார், சேது என மூன்று இளைஞர்கள். மூவரும் விசாகாவை ஒருதலையாக காதலிக்கிறார்கள். அவள் ஒருவரைக் காதலித்தால் மற்றொருவர் விலகிக் கொள்ளவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் மூவரும் தனித்தனியாக அவளை அணுகுகிறார்கள்.

விசாகாவை கவர்வதற்காக, அவளுடைய அப்பா, சித்தப்பா, சின்னம்மா என்று மூவரும் ஒவ்வொருவராக ஐஸ் வைக்கிறார்கள். இறுதியில், விசாகா யாரை காதலிச்சார்? முடிவு என்ன ஆச்சு? என்பதை வயிறு குலுங்க சிரிக்க வைத்து சொல்லியிருக்கிறார்கள்.

படத்தில் என்னை கவர்ந்த சில நட்சத்திரங்கள்

1. பவர் ஸ்டார்
படத்தோட மிகப்பெரும் பலமே பவர்ஸ்டார்தான். பவர்ஸ்டார் நிஜவாழ்க்கையில் அடிக்கும் லூட்டிகளை வசனங்களாக போட்டு தாக்குகிறார் சந்தானம். இதில் பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இதையெல்லாம் பவர் ஸ்டாரும் என்ஜாய் பண்ணுகிறார் என்பதுதான்.

பவர் ஸ்டார் படத்தில் ஸ்கோர் செய்யும் காட்சிகள் ஏராளம். ‘அழகுமலர் ஆட’ பாடலுக்கு டான்ஸ் ஆடுவது, தனது அல்லக்கைகளின் பாராட்டுதல்களுடன் நடனப் பயிற்சி மேற்கொள்வது என அசத்துகிறார்.

2. சந்தானம்
சந்தானம் இந்த படத்தின் தயாரிப்பாளராக இருந்தாலும், தன்னை மட்டுமே முன்னிறுத்தாமல் மற்றவர்களுக்கும் சமவாய்ப்பு கொடுத்திருக்கிறார். சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்ய நினைக்கும் இவருடைய இந்த முயற்சி அவருக்கு வெற்றியையேக் கொடுத்துள்ளது.


3. சேது
சேது இந்த படத்தின் மூலம் புதுமுகமாக அறிமுகமாகியிருக்கிறார். கதாநாயகி விசாகா அழகாக இருக்கிறார். நன்றாகவும் நடித்திருக்கிறார்.

4. காமெடி நட்சத்திரங்கள்
சங்கீத வித்வானாக வரும் வி.டி.வி. கணேஷ், தனது குரல் கெட்டதற்கான காரணம் சொல்வது அடக்கமுடியாத சிரிப்பு.

நாயகி விசாகா படத்துல ஊறுகாய் போல ஆங்கங்கே பேசி சிரித்து வழிகிறார். மேலும் கோவை சரளா, டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர், தேவதர்ஷினி ஆகியோரும் காமெடியில் நம் வயிரை பதம் பார்த்திருக்கின்றனர்.

5. இயக்குனர் மணிகண்டன்
படத்தின் ஆரம்பக் காட்சி முதல் கடைசி காட்சி வரை காமெடியை விடாமல் பிடித்துக் கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் மணிகண்டன். படத்தோட கதை திருட்டுக் கதை என்பது மட்டுமே உறுத்தினாலும், குடும்பத்தோடு தியேட்டருக்கு சென்று வயிறு குலுங்க சிரித்துவிட்டு வரலாம்.

6. இசை & ஒளிப்பதிவு
தமன் இசையில் அனைத்து பாடல்களும் ஓ.கே. ரகம். “ஆசையே அலை போல’ பாடலும், “கண்ணா லட்டு திங்க ஆசையா’ பாடலும் வெகு ஜோர்.

பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு வேகமும், படத்திற்கு உத்வேகத்தையும் கொடுத்திருக்கிறது.

('இன்று போய் நாளை வா' - கே. பாக்யராஜ் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்).

என்னதான் வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்தாலும் 'இன்று போய் நாளை வா' படத்தின் பாதிப்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரிவது உரிமையாளர்களுக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். மேலும் படம் முடியும் போது இன்று போய் நாளை வா படம் பார்த்த சந்தானத்தின் ரசிகர்களும் பாக்கியராஜின் திரைக்கதையிலமைந்த படத்திலிருந்த உயிரோட்டோம் இதில் சற்றே குறைவுதான் என முணுமுணுக்க வைக்கிறது.

No comments: