காற்று வாங்கப் போகலாமா

காற்று வாங்கப் போகலாமா?

உலகம் இனிமையானது; அதனினும் இனிமையானது, வாழ்க்கை; வாழ்க்கை வாழ்வதேற்கே; வாழ்க்கையில் கிடைக்கக் கூடிய இன்பமே உலக இன்பம். நம்முடைய வாழ்க்கையை இன்பமுடையதாக அமைத்துக்கொள்ள வேண்டும்.
வாழ்க்கை என்பது ஒரு கலை. வாழும் கலையைக் கற்றவர் நீண்ட நாள் வாழ்கின்றனர். வாழ்க்கையில் பெறப்படுகின்ற இன்பத்தின் அளவே வாழ்க்கையில் கிடைக்கப் பெறுகின்ற வெற்றியின் அளவாகும்.
இன்பமில்லாத வாழ்க்கையை உடையவர், வாழ்க்கையின் வெற்றிகளைப் பெற முடியாது.
வாழ்வாங்கு வாழும் வாழ்க்கையை வகுத்திருப்பது, இயற்கை. இயற்கைக்கு மாறாக வாழ்வது வாழ்க்கையாகாது. இயற்கையுடன் இயைந்து வாழ்வதேக வாழ்க்கை. மனிதன் நெடுங்காலம் வாழ வேண்டுமானால், உடம்புக்குத் தேவையான உணவுப்பொருள்களைத் தருதல் வேண்டும். சமைப்பது மட்டுமே உணவாகாது.
சுவாசம் நின்றுவிட்டால், உயிர் போயிவிடும். உடம்பு இறந்துவிடும். காற்று இல்லாமல் மனிதன் வாழவே முடியாது. காற்று, உடம்புக்குத் தேவையான உணவுகளில் முதல் உணவு.
தண்ணீரோ, உண்ணும் உணவுகளோ இல்லாமல் பல நாள் இருக்கலாம். காற்று இல்லாமல் ஒரு நாள்கூட இருக்க முடியாது.
உடம்புக்குத் தேவையான மூலப்பொருள்கள் அனைத்தும் காற்றில் இருக்கின்றன. காற்றை மட்டுமே உணவாக உட்கொண்டு நெடுங்காலம் உயிர் வாழ்ந்த சித்தர்கள், யோகிகள் இருந்ததுள்ளனர். அது அவர்கள் கற்ற, வாழும் கலை.
கல்வியோ, கற்கும் திறனோ இல்லாத நல்ல பாம்பு, இரை என எதுவும் தின்னாமல், காற்றை மட்டுமே உணவாக உட்கொண்டு, ஆறு மாதத்துக்கும் மேலாக உயிரோடிக்கிறது.
ஆனால், மனிதர்கள் காற்றின் சிறப்பையும், காற்று எந்த அளவுக்கு உடம்புக்கு இன்கறியமையாதது என்பதையும் அறிந்துகொள்ளாமல், வறுமையினால், பசிக்கொடுமையினால், இறந்துவிடுவதாகக் கூறுகிறார்கள்.
காற்றை சரியான முறையில் பயன்படுத்தத் தவறினால், நுரையீரல் நோய், மார்பு நோய், இருமல், செரியாமை போன்ற கொடிய நோய்கள் வருகின்றன. இந்நோயால் மாண்டுபோவோரின் எண்ணிக்கையோ, கோடிக்கும் மேல்.
தூய்மையான காற்றை முறையாகப் பயன்படுத்தி வந்தால் உடம்பு நீண்ட காலம் வாழ்ந்திருக்கும்.
உடம்புக்குத் தேவையான அளவு காற்றை உள்ளுக்கு இழுத்து வெளியே விடுகிறது நுரையீரல். வெளியில் இருக்கும் காற்று தூய்மையானதாக இருந்தால், நுரையீரல் முழு அளவு விரிந்து காற்றை இழுத்துக் கொள்ளும். காற்று தூய்மையில்லாமல், நச்சுத்தன்மை உடையதாக இருந்தால், நுரையீரல் விரிவதைக் குறைத்துக் கொள்ளும். அதனால், குறைவான காற்றே உள்ளுக்குள் செல்லும்.
தூய்மையான காற்றே இல்லாமல், நச்சுக் காற்று மட்டுமே கிடைக்கக் கூடிய பகுதிகளில் வாழுகின்ற மனிதர்கள், எந்த நேரமும் நச்சுக்காற்றையே உணவாக உட்கொள்வதனால், உடல் நலம் பாதிக்கிறது. உள்ளே சென்றுவிடும் நச்சுப் பொருள்கள் நோய்களை உற்பத்தி செய்கின்றன.
எனவே, வெளியிலிருந்து பெறப்படுகின்ற காற்று, மனித உடம்புக்கு அமிழ்தம் போன்றது என்பதை அறிய வேண்டும்.
ஒவ்வொரு பகுதிலும் வாழுகின்ற மனிதர்கள், தாங்கள் வாழும் பகுதியிலுள்ள காற்று தூய்மையானதா நஞ்சுடையதா என்பதைச் சிறிய சோதனையின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
ஒரு படி தண்ணீரில் சிறிது சுண்ணாம்பைக் கரைத்து தெளிய வைத்தால், சுண்ணாம்பெல்லாம் தண்ணீரின் அடியில் தங்கிவிடும். மேலே நிற்கும் தெளிந்த நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொண்டு. மூக்கிலிருந்து வெளிவரும் காற்றை ஒரு சிறு குழாயின் வழியாகப் பாத்திரலிருக்கும் சுண்ணாம்பு நீரின் மேல் படும்படிச் செய்தால், சுண்ணாம்புத் தண்ணீரின் மேல் பாலேடு படர்ந்துபோலச் சுண்ணம்பு கட்டும்.
இப்படியே ஒருவர் வெளிவிடும் மூச்சுக்காற்றை அத்தண்ணீரின் மேல் படும்படிச் செய்து கொண்டிருந்தால், சிறிது நேரத்தில் ஒரு கட்டிச் சுண்ணாம்பு எடுக்கும் அளவுக்குத் தோன்றும். இதன் மூலம், மூச்சு விட்டவர் சுவாசித்த காற்றில் நச்சுத்தன்மை கலந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
ஒருவர் பல நாட்கள் நச்சுக்காற்றையே சுவாசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அவர் சுவாசிக்கும் காற்றிலுள்ள நஞ்சு, நுரையீரலைப் பாதித்து, ரத்தத்தில் கலந்து இதயத்தைப் பாதித்து, தீராத நோய்க்குள் தள்ளிவிடும்.
எனவே, மனிதர்கள் வாழுமிடங்களில் தூய்மையான காற்று கிடைக்குமாறு இருக்க வேண்டும். வீடுகளில், போதிய அளவு சன்னல்கள் இருக்க வேண்டும். சன்னல்கள் இல்லாத வீடுகளில் பலர் சேர்ந்து இருக்கும்போது, தூய்மையான காற்றை சில மணி நேரங்களில் அனைவரும் சுவாசித்து விடுவர். அதன் பின்னர், அவரவர் சுவாசித்து வெளிவிட்ட நச்சுக்காற்றையே மீண்டும் சுவாசிக்க வேண்டியிருக்கும்.
அவ்வாறு சுவாசிக்கும்போது, நச்சுக்காற்று ரத்தத்தில் கலந்துவிடும். நுரையீரல் சுருங்கிவிடும். மூளையின் வலிமை குன்றிவிடும். அறிவு மழுங்கிவிடும்.
மூச்சுக்காற்றின் ஓட்டம் குறைந்தால், ஈளை, எலும்புருக்கி, நீரிழிவு முதலான நோய்கள் உருவாகும்.
எனவே, சன்னல் இல்லாத வீடுகள் இருந்தாலும் அதில் மனிதர்கள் வசிக்கக் கூடாது.
சன்னல்கள் இல்லாத வீட்டிலோ அறையிலோ தங்குவது தன்னைத்தானே கொன்று விடுவது போன்றதாகும். ஒருவரை சன்னல் இல்லாத அறைக்குள் விட்டு கதவை அடைத்துப் பூட்டிவிட்டால். சில மணி நேரத்திலேயே அறையிலுள்ள தூய காற்றையெல்லாம் இழுத்து சுவாசித்து விடுவார். அதன் பிறகு அறைமுழுவதும் நச்சுக் காற்று நிறைந்துவிடும்.
நச்சுக்காற்று வெளியே செல்ல வழி இல்லாததால் அறைக்குள்ளேயே இருக்கும். அறையில் விடப்பட்டவர் நச்சுக்காற்றையே சுவாசிப்பார். நச்சுக்காற்றைச் சுவாசிக்க நேரும்போதெல்லாம் நுரையீரல் சுருங்கும். நச்சுக்காற்றை மட்டுமே சுவாசிக்கின்றவரின் நுரையீரல் சுரங்கி, செயல்படாமல் நின்றுவிடும். மூச்சுத் திணறும். இறந்துவிடுவார்.
இதற்குப் பெயர் தற்கொலை தானே?
தூய்மையான காற்றைச் சுவாசித்து வெளியே விடுகின்ற நச்சுக்காற்று, பகலை விட இரவில் மிகுதியாகப் பரவும். பகல் வேளையில் புல், பூண்டு, மரம், செடி, கொடி போன்றவை நச்சுக்காற்றை உள்ளுக்கு இழுத்துக் கொண்டு, தூய்மையான காற்றை வெளியே விடுகின்றன. இரவில், அவை தூய்மையான காற்றை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டு நச்சுக்காற்றை வெளியே விடுகின்றன.
ஆனால், மனிதர்கள் பகலிலும் இரவிலும் ஒரே மாதிரியே சுவாசிக்கின்றனர். மரம், செடி, கொடிகள் நிறைந்த நிலத்தில் வீடு கட்டிக்கொண்டிருப்பவர்களுக்கு இரவில் தூய்மையான காற்று கிடைப்பதே அரிதாகும்.
மரங்கள், செடி, கொடிகள், மனிதர்கள் என எல்லாமும் இரவில் நச்சுக்காற்றையே வெளியிடுவதால், நச்சுக்காற்றே எல்லா இடங்களிலும் பரவி இருக்கும்.
இரவு நேரங்களில் மரங்களுக்குக் கீழே தங்குவதும் படுப்பதும் கூடாது. ஏனென்றால் மரத்தினது அடியில் தூய காற்று கிடைக்காது.
வீட்டைச் சுற்றி மரம் வளர்த்தால், பகலில் மட்டுமே பயன்படும். இரவு நேரத்தில் பயன்படாது. இரவு நேரத்தில் மரங்களின் கீழே படுப்பதும் நலம் தராது. துன்பும் தரும்.
இரவில் மரம் செடிகளிலிருந்து வெளிவருகின்ற நச்சுக் காற்று வீட்டுக்குள் நுழையும். ஆகையால், தூய்மையான காற்று வீட்டுக்குள் உலாவும்படி சன்னல்கள் இருக்க வேண்டும்.
அதேபோல், வீட்டுக்குள் நச்சுக்காற்றை அதிகப்படுத்துகின்ற பொருள்களை அகற்ற வேண்டும். உங்குவதற்கு முன், வீட்டில் எரிந்து கொண்டிருக்கும் விளக்குகளை நிறுத்த வேண்டும். விளக்குகள் எரிவதற்குத் தூய காற்று தேவை. தூய காற்றை உறிஞ்சி எரிகின்ற விளக்கு, நச்சுக்காற்றை வெளிப்படுத்தும்.
அதே போல், தலைமாட்டில் விளக்கு எரியக்கூடாது. மூச்சு, முகத்துக்கு அருகிலுள்ள காற்றை இழுக்கும். விளக்கு தலைமாட்டில் இருந்தால், தலைக்கு அருகில் நச்சுக்காற்றே இருக்கும்.
வீட்டுக்குச் சுண்ணாம்பு பூசுவது நல்லது. சுண்ணாம்பு நச்சுக்காற்றை உறிஞ்சிவிடும். சாக்கடைகளில் சுண்ணாம்பு நீரைத் தெளித்தால், அதிலிருந்து வெளியாகும் நச்சுக் காற்றைச் சுண்ணாம்பு நீர் உறிந்து கொள்ளும். நச்சுக்காற்று தரை மட்டத்தில் உலவிக் கொண்டிருக்கும். தூய்மையான காற்று தரை மட்டத்துக்கு மேலே உலவிக் கொண்டிருக்கும் என்பதனால், தரையில் படுத்து உறங்குவதை விடச் சாலச்சிறந்தது. கட்டிலின் மேல் படுப்பதாகும்.

No comments: