அப்பாவாகப் போகும் ஆண்களுக்கு


அப்பாவாகப் போகும் ஆண்களுக்கு..

‘‘முதல் 3 மாதங்களில் கணவன், தன் மனைவியுடன் அதிக நேரம் செலவிட வேண்டியது அவசியம். வாந்தி, மசக்கை, தலைசுற்றல், மனநிலை மாற்றம், உணவின் மீது வெறுப்பு என மனைவி சந்திக்கிற பல உபாதைகளுக்கும், கணவனின் அன்பும் அருகாமையும்தான் முதல் மருந்து. 

காலையில் மனைவி மெதுவாக எழுந்திருக்க நேரிடும். தனக்கு வேலைக்குச் செல்ல நேரமாகிறதே எனக் கடிந்து கொள்ளாமல், மனைவிக்கு முடிந்த உதவிகளைச் செய்யலாம். முதல் 3 மாதங்கள் குழந்தையின் வளர்ச்சியில் மிக முக்கியமானது என்பதால், மனைவிக்குத் தேவையான மருந்துகளையும் கவனமாகப் பார்த்துக் கொடுக்க வேண்டியது கணவனின் பொறுப்பு.

மனைவிக்கு நீரிழிவோ, ரத்த அழுத்தமோ இருந்தால், இன்னும் அதிக அக்கறையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். மசக்கையைக் காரணம் காட்டி, அதிக இனிப்போ, உப்போ உள்ள பொருள்களைக் கேட்டாலும், கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 4 முதல் 7வது மாதங்களில் மனைவியின் உணவில் மிகுந்த அக்கறை காட்ட வேண்டும்.

இரும்புச் சத்தும் கால்சியமும் அந்த நாள்களில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு அதிகம் தேவை என்பதைத் தெரிந்து கொண்டு, அவை அதிகமுள்ள உணவுகளை வாங்கிக் கொடுக்க வேண்டும். முதல் 3 மாதங்களில் தாம்பத்ய உறவைத் தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். 4 முதல் 7ம் மாதம் வரை, கர்ப்பிணிக்கு எந்தச் சிக்கலும் இல்லாத பட்சத்தில், மிதமான உறவு வைத்துக் கொள்ளலாம்.

பிரச்னை இருந்தால், கட்டாயம் தவிர்க்க வேண்டும். கர்ப்ப காலத்தில் சிறுநீரகத் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம். அது கர்ப்பத்தைப் பாதிக்கும் என்பதால், இது போன்ற விஷயங்களில் மனைவிக்கு கணவன் ஒத்துழைக்க வேண்டும். கடைசி மூன்று மாதங்களில் கணவனின் பொறுப்பு இன்னும் அதிகம். பிரசவம் குறித்த பயத்தைப் போக்க தைரியம் சொல்வதோடு, தரமான மருத்துவமனையில் பிரசவம் நிகழ முன்னேற்பாடுகளை செய்து வைக்க வேண்டும்.

அவசர காலத் தேவையைக் கருத்தில் கொண்டு, பிரசவத்துக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முன்கூட்டியே தயாராகச் செய்து வைக்க வேண்டியதும் கணவனின் பொறுப்பே. இப்படியெல்லாம் செய்தால், பிரசவத்துக்குப் பிறகு பெரும்பாலான பெண்களுக்கு உண்டாகிற ‘போஸ்ட் பார்ட்டம் ப்ளூஸ்’ எனப்படுகிற மன அழுத்தப் பிரச்னை வராது. தவிர தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிறக்கும் குழந்தையின் மனநலமும் ஆரோக்கியமாக இருக்கும்!’’

No comments: